உலகமெங்கிலும் எதில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ? தங்கத்தில் முதலீடு என்றால், அது உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளும் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
ஒரு புறம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மறுபுறம் தங்கம் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டுக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தினை நாளை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்தான முடிவு நாளை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் குறைக்கப்படுமா?
இது இன்று உலகளாவிய முதலீட்டாளர்களின் பார்வையில் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இது உள்ளது. ஏனெனில் கொரோனாவினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், ஊக்குவிப்பு சலுகையானது மீண்டும் இந்த முறை பெரியளவில் அறிவிக்கப்படலாம். எல்லாவற்றையும் விட, கொரோனாவினால் முடங்கி போன பொருளாதாரத்தினை ஊக்குவிக்க வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்றும் ஒரு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெடரல் வங்கி நிலைப்பாட்டினை தக்க வைத்துக் கொள்ளுமா?
மேலும் அமெரிக்கா எதிர்கால பொருளாதார திட்டங்களில் அதிக கவனம் செலுத்தலாம். மத்திய வங்கி இதுவரை பொருளாதாரத்தினை ஆதரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வட்டி குறைப்பும் செய்துள்ளது. ஆக இந்த முறை தனது நிலைபாட்டினை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்பது இந்த கூட்டத்தின் இறுதியில் தான் தெரிய வரும். ஒரு வேளை முதலீட்டாளர்கள் நினைப்பது போல், வட்டி விகிதம் குறைந்தால், அது தங்கத்திற்கு நேர்மறையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை பற்றிய எதிர்பார்ப்பு
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1680 டாலரை ஆதரவாக கொண்டு, ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, தற்போது 1720 டாலர்களுக்கு மேலாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தற்போது கொரோனாவின் தாக்கமும் சில நாடுகளில் குறைய தொடங்கியுள்ளது. அதோடு இன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் எந்த மாதிரியான அறிவிப்புகள் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பிலேயே தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
தொடர்ந்து சர்வதேச சந்தையில் மூன்றாவது நாளாக தங்கம் விலையானது அதிகரித்து வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு 3.65 டாலர்கள் அதிகரித்து 1725.40 டாலராக வர்த்தகமாகி வருகிறது. எப்படி எனினும் பெடரல் வங்கி கூட்டத்திற்கு பிறகு பெரியளவில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றத்தினை கூட கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. இன்று 10 கிராம் தங்கத்தின் விலையானது 138 ரூபாய் குறைந்து, 46,732 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் வெள்ளியின் விலையானது இன்று மட்டும் 1.14 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. தற்போது 18.017 டாலர்களாக வர்த்தக மாகி வருகிறது. முந்தைய சந்தை அமர்வில் வெள்ளியின் விலையானது சற்று குறைந்திருந்தாலும், இன்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளியின் விலையானது தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது வெள்ளியின் விலையானது 466 ரூபாய் அதிகரித்து, 49,380 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 1 சதவீத ஏற்றமாகும்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு (22 கேரட்) 4,494 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 376 ரூபாய் அதிகரித்து 35,952 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலையானது தொடர்ந்து கடந்த ஐந்து தினங்களாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், 5 நாளில் 536 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது.
ஆபரண வெள்ளி விலை
தங்கத்தின் விலையினை போல் அல்லாமல் வெள்ளியின் விலையானது ஒரு நாள் ஏற்றமும், மறு நாள் இறக்கமும் கண்டு வருகிறது. இது கிராமுக்கு 48.30 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 900 ரூபாய் அதிகரித்து 48,300 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் 3 நாள் ஏற்றமும், 2 நாள் வீழ்ச்சியும் கண்டு வருகிறது.