தங்கம் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, ஓட்டுமொத்த நோக்கில் அதிகரித்தே காணப்படுகிறது. இது அவ்வப்போது சரிவினைக் கண்டு இருந்தாலும், மொத்தத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 15% மேலாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இது பணவீக்கமானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, தங்கத்தின் தேவையானது மோசமான சரிவினைக் கண்டிருந்தது.
விலை அதிகரிக்கலாம்
இதற்கிடையில் சமீப மாதங்களாகத் தான் தங்கத்தின் தேவையானது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. எனினும் உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியிலும், பணவீக்கம் காரணமாகவும் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சவரனுக்கு 40,000 ரூபாயினை கடந்தது.
தள்ளுபடி
இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது அதிகரித்து வரும் நிலையில், தேவையானது சரியத் தொடங்கியுள்ளது. தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், அதோடு இறக்குமதி வரி, அதனுடன் ஜிஎஸ்டி என சேர்த்து செலுத்த வேண்டியுள்ள நிலையில், இது இன்னும் ஆபரணத் தங்கத்தின் விலையை ஊக்குவிக்கிறது. இதற்கிடையில் விற்பனையை ஊக்குவிக்க தங்க டீலர்கள் இந்தியாவில் தள்ளுபடியை அதிகரித்துள்ளனர்.
எவ்வளவு தள்ளுபடி
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது தேவை குறைய வழிவகுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 55500 ரூபாய்க்கு மேலாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதன் வரலாற்று உச்சமானது 10 கிராமுக்கு 56,191 ரூபாயாகவும் உள்ளது. இதற்கிடையில் தான் உள்நாட்டில் விற்பனையை அதிகரிக்கும் விதமாக அதிகபட்சமாக அவுன்ஸுக்கு 77 டாலர்கள் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன.
முந்தைய வார நிலவரம்
இந்த தள்ளுபடி விகிதமானது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளதாகவும், இது முந்தைய வாரத்தில் 27 டாலர்களாக இருந்தாகவும் கூறப்படுகின்றது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட இருமடங்கு தள்ளுபடியும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது தங்கத்திற்காக இறக்குமதி வரி 10.75%+ ஜிஎஸ்டி வரி 3% என விதிக்கப்படுகிறது.
பழைய தங்கம் விற்பனை அதிகரிப்பு
ஒரு புறம் இந்த தள்ளுபடியால் விலை சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பழைய தங்கத்தினை வைத்திருப்பவர்கள் இது தான் சரியான தருணம் என தங்களது கைகளில் இருக்கும், பழைய நகையை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
அதிகளவில் செய்யப்படும் தங்கம் இறக்குமதியானது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஏப்ரல் - பிப்ரவரி மாதத்தில் 73% அதிகரித்து 45.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 26.11 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரியில் சரிவு
எனினும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 11.45% குறைந்து, 4.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சீனாவினை அடுத்து இரண்டாவது பெரிய தங்க இறக்குமதியாளராக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது வரும் மாதங்களிலும் சரியலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.