பட்டி தொட்டியெல்லாம் பாகுபாடு இல்லாமல் பரவி வரும் கொரோனா தாக்கத்தினையடுத்து, உலகமே முடங்கியுள்ளது எனலாம். ஒரு புறம் தொழில்துறைகள், ஆலைகள், நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியுள்ளன.
இதனால் பல லட்சம் பேர் உலகம் முழுக்க வேலையிழந்து தவித்து வருகின்றனர். அதிலும் வல்லரசான அமெரிக்காவில் தான் இது அதிகம்.
கோவிட்-19 என்ற இந்த கொடிய அரக்கனின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும், இதன் ஆதிக்கம் தற்போது அமெரிக்காவில் தான் அதிகம் உள்ளது. இப்படி உலகின் முதன்மையான பொருளாதார நாட்டினையே உலுக்கி வரும் இந்த கொடிய அரக்கனால், அங்கும் பல லட்சம் மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
தங்க சுரங்கங்களிலும் பாதிப்பு
இது தான் இப்படி எனில் மறுபுறம், தங்க சுரங்கங்களை கூட விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா என்னும் கொடிய அரக்கன். சைபீரியாவின் Krasnoyarsk என்ற சுரங்கத்தின் 89 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்திகள் கூறுகின்றன. இதில் கவலை தரும் விஷயம் என்னவெனில் பாதிக்கபட்டவர்களில் 94% அதிகமானவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லையாம்.
ரஷ்ய சுரங்கத்திலும் பாதிப்பு
ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய சுரங்கமாக ஒலிம்பியாடா சுரங்கத்தில் பல டஜன் தொழிலாளர்களுக்கு இருப்பதாகவும் முதற்கட்ட ஆய்வுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு 3,400 மேற்பட்ட தொழிலாளர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு 26 மில்லியன் அவுன்ஸ் தங்கம் இருப்பு உள்ளதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுவும் ஒரு காரணமாக அமையும்
இந்த நிலையில் அங்கு சுரங்கங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சரி அதற்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள். நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது. ஏற்கனவே தங்கத்தின் விலையை உச்சத்துக்கு கொண்டு செல்ல ஆயிரம் காரணம் இருந்தாலும், இதுவும் தற்போது கூட சேர்ந்துள்ளது எனலாம். நிச்சயம் தங்கம் இருப்பு குறையலாம். இதனால் நிலைமை சரியானலும் கூட, தேவைக்கு ஏற்ப தங்கம் இருப்பு இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆக அது தங்கம் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமையலாம்.
தங்கம் விலை நிச்சயம் அதிகரிக்கும்
இன்று தங்கத்தின் விலை சரிந்து இருந்தாலும் நிச்சயம் எதிர்காலத்தில் விலையேற்றத்திற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது தவிர மணிகன்ட்ரோல் இணையத்தில் வெளியான ஒரு செய்தியில் தங்கம் அடுத்து வரும் 2023ம் நிதியாண்டு வரை 25% வரை லாபத்தினை கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், சர்வதேச அளவில் பரவி வரும் கொரோனாவால் பொருளாதாரம் இன்னும் மோசமான மந்த நிலைக்கு செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு
ஆக முதலீட்டாளர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மஞ்சள் உலோகத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதிலும் வரவிருக்கும் காலங்களில் பொருளாதார வளர்ச்சி குறித்தான மோசமான கணிப்புகள் வரக்கூடும். அது தங்கம் விலைக்கு ஆதரவாக செல்லக்கூடும் என்றும் அந்த செய்திகள் கூறுகின்றன.
தங்கம் தான் சிறந்த பெர்பார்மர்
இந்த நிலையில் போர்ட்போலியோ முதலீடுகளில் தங்கம் சிறந்த பெர்பார்மராக உள்ளது எனலாம். அது இன்று மட்டும் அல்ல இன்னும் அடுத்து வரும் 10 காலாண்டர் ஆண்டுகளில் 5 ஆண்டுகளில் தங்கம் தான் சிறந்த முதலீடாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே வருடத்துக்கு 15% லாபம் ஆவது தங்கத்தினால் கிடைக்கும் என்றும் மற்றொரு மூத்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் விலை
ஆக இப்படி எல்லோர் மனதிலும் ஏற்றத்தினை மட்டுமே கண்டு வரும் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்றே சர்வதேச சந்தையில் சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று காலை 10.15 நிலவரப் படி, தங்கத்தின் விலையானது அவுன்ஸுக்கு 5.55 டாலர்கள் குறைந்து, 1708.35 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை 41 ரூபாய் குறைந்து, 45,771 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமையன்று சரிவில் முடிந்த சந்தையானது, இன்றும் சற்று சரிவுடனே தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டாலும் வெள்ளியின் விலையானது தொடர்ந்து, இன்றோடு கடந்த நான்கு சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 0.67% ஏற்றம் கண்டு 15.883 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது சீனாவில் ஆலைகள் உற்பத்தி தொடங்கிய நிலையில் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கலாம் என்கிறார்கள் கமாடிட்டி நிபுணர்கள்.
எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது தொடர்ந்து மூன்று தினங்களாகவே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 310 ரூபாய் அதிகரித்து 43,603 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. மேலும் இது இன்னும் தொடர்ந்து ஏற்றம் காணும் வகையிலேயே காணப்படுகிறது.
தங்க ஆபரணம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,422 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,376 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று மட்டும் சற்று விலை குறைந்து இருந்த நிலையில் தொடர்ந்து தங்கம் விலையானது சிறிது சிறிதாக ஏற்றக் கண்டு கொண்டே தான் வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
சென்னையில் கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 43.62 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலை 43,620 ரூபாயாகபவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விலையினை பொறுத்த வரை கடந்த ஆறு தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.