போகிற போக்கை பார்த்தால் பொட்டு தங்கம் கூட வாங்க முடியாத நிலைக்கு சென்று விடுமோ என்று எண்ணும் அளவுக்கு ஏற்றம் கண்டு வருகிறது தங்கம் விலை. அதிலும் அமெரிக்கா ஈரான் இடையே உருவாகியுள்ள இந்த பிரச்சனையால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பெரும் பிரச்சனையை சந்திக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் எனில் இந்தியாவில் அனைவராலும் மிக விரும்பி அணியப்படும் ஆபரணமாக தங்கத்தின் விலையானது, கன்னாபின்னவென்று அதிகரித்து வருகிறது.
சரி இப்படி திடிரென்று அதிரடியான ஏற்றம் கண்டுள்ளது ஏன்? விலை குறையுமா? குறையாதா? இன்னும் எவ்வளவு அதிகரிக்கும் என்று தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.
பாதுகாப்பான முதலீடு
ஈராக்கில் அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஜெனரல் சுலைமானி கொல்லபட்டார். இது ஈரான் மட்டும் அல்ல உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது. ஆக இதன் எதிரொலியால் சர்வதேச அளவில் ஒரு பாதுகாப்பான உலோகமாக கருதப்படும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் தங்கத்தின் விலையானது ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
பாதுகாப்பான முதலீடு
ஈராக்கில் அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஜெனரல் சுலைமானி கொல்லபட்டார். இது ஈரான் மட்டும் அல்ல உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது. ஆக இதன் எதிரொலியால் சர்வதேச அளவில் ஒரு பாதுகாப்பான உலோகமாக கருதப்படும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் தங்கத்தின் விலையானது ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
தாறுமாறான ஏற்றம் கண்டு வரும் தங்கம்
தற்போது தான் அமெரிக்கா சீனா பிரச்சனை சற்றே ஓய்ந்துள்ளதாக நிம்மதியடைந்த முதலீட்டாளர்கள், தற்போது அமெரிக்கா ஈரான் பிரச்சனையால் பதற்றத்தில் உள்ளனர். இதனால் ஈக்விட்டி முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பான முதலீடுகள் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் சர்வதேச சந்தைகள் சரிந்துள்ளன. ஆனால் இதற்கு மாறாக தங்கத்தின் விலையானது தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது.
மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கும் கமாடிட்டிகள்
ஈரான் தனது அணுசக்தி ஒப்பந்தத்தை திரும்ப பெறுவதாக கடந்த ஞாயிற்குகிழமை அறிவித்தது. இது ஒரு புறம் எனில் மறுபுறம் அமெரிக்கா சீனாவின் சாதகமான வர்த்தக ஓப்பந்தம் ஏற்பட போகிறது என்று பேரானந்தத்தில் இருந்த முதலீட்டாளர்கள் ஆசையில், ஒரு லாரி மண்ணை அள்ளிக் கொட்டியது போல தற்போது திணறடித்துள்ளது ஈரான் பிரச்சனை. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையால், உலகளவில் இரு பெரும் காமாடிட்டிகளாக கருதப்படும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யை பதம் பார்த்துள்ளது.
விலை நிலவரம்
இந்த நிலையில் சர்வதேச சந்தையை பொறுத்தவரையில் இன்று தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 27 டாலர்கள் அதிகரித்து 1579.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களிலேயே 100 டாலர்களுக்கும் மேலாக அதிகரித்த தங்கத்தின் விலையானது, இன்னும் அதிகரிக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய சந்தையில் விலை எப்படி?
சும்மாவே தங்கம் விலை அதிகரிக்கும். இந்த நேரத்தில் சரியான காரணம் வேறு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இன்று தற்போது (11.45 மணியளவில்) தங்கத்தில் விலையானது 40,993 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கிட்டதட்ட இன்று மட்டும் 900 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது. இதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் 72.10 ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை
சென்னையில் ஏற்கனவே ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 30,000 ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில் இன்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் புத்தாண்டு தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் ஆபரண தங்கம் விலையானது, இன்று கிராமுக்கு 3,833 ரூபாயாகவும், சவரனுக்கு (22 கேரட்) 30,664 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?
தங்கம் விலையானது அமெரிக்கா ஈரான் இடையே நிலவி பதற்றம் தனியும் வரை குறைய வாய்ப்பில்லை என்றும், அதிலும் இந்திய சந்தையில் இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் அதிகமாக வீழ்ச்சி கண்டு வருகிறது. இது தவிர இந்தியாவில் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி என பல பிரச்சனைகளை தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதனால் தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. முன்னதாக தங்கத்தின் விலையானது 1,800 டாலர்கள் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் கூறியது உண்மையாகி விடும் போலிருக்கிறது.