தங்கம் என்ன விற்கும் விலைக்கு விற்றால் என்ன? கொரோனா வந்தால் என்ன? என்பது போல சென்னை நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தினை பார்த்தால், இப்போதுமா? தங்கம் வாங்குகிறார்கள் என்ற எண்ணத் தோன்றுகிறது.
என்னதான் தங்கம் விலை விண்னைத் முட்டும் அளவுக்கு ஏறிச் சென்றாலும், விலை இப்படியே தான் இருக்குமா? குறையவே குறையாதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்தக் கட்டுரை. கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலையானது, தொடர்ந்து வரலாற்று உச்சம் தொட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாகத் தான் சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக குறைந்துள்ளது.
தங்கம் விலை குறையும்
சொல்லப்போனால் கடந்த இரண்டு வாரங்களில் 10 கிராம் தங்கம் விலையானது 60,000 ரூபாய் முதல் 52,500 ரூபாய் வரையில் வர்த்தகமாகி வருகின்றது. இதற்கு வலுவான ரூபாயின் மாற்றமும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் வாரங்களில் தங்கம் விலையானது 50,000 ரூபாயிற்கு கீழ் குறையும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இது முதலீட்டாளர்களுக்கு சரியான சான்ஸ்
தங்கத்தில் முதலீடு செய்வது இது சிறப்பானதொரு காலமாக கருதப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் இது ஒரு பொன்னான காலமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 10 கிராம் தங்கம் விலையானது 52,155 ரூபாயினை தொட்ட நிலையில், வரும் வாரத்தில் இது 50,000 செல்லக்கூடும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சரிவுக்கு என்ன காரணம்?
தங்கம் விலை குறையும் சரி? ஏன் எதற்காக குறையும்? ஏனெனில் கொரோனா வழக்குகளும் தற்போதைக்கு குறைவதாக தெரியவில்லையே அப்புறம் எப்படி தங்கம் விலை குறையும். சர்வதேச சந்தையில் நிகழும் அதிரடியான ஏற்ற இறக்கத்தினால், சர்வதேச தங்கம் விலையானது ஒரு நல்ல வாய்ப்பினைக் கொடுக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச சந்தையில் இவ்வளவு குறையுமா?
இந்தியாவின் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரி கவுன்சிலின் தலைவர் சாந்திபாய் படேல், ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியொன்றில், தங்கம் விலையில் மேலும் 20 - 30 டாலர் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆக சில்லறையாக தங்கத்தினை வாங்குபவர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் தங்கத்தினை சிறிய அளவில் வாங்குமாறும் பரிந்துரைத்துள்ளார்.
கோல்டு இடிஎஃப்பில் முதலீடு செய்யலாம்?
அதோடு சிறு முதலீட்டாளர்களும் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களும் தங்கம் இடிஎஃப்பில் முதலீடு செய்யலாம் என்றும் நிபுணர்கள் கருத்தினை தெரிவித்துள்ளனர். ஏனெனில் இது பங்கு சந்தைகளை போலவே விலையேற்றத்திற்கு தகுந்தவாறு வாங்கலாம், விற்கலாம். இந்த பரிவர்த்தனை வர்த்தகத்தில் மொத்த தொகையாக அல்லது ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து கொள்ளலாம்.
எந்தவொரு விலையில் வாங்கினாலும் லாபம் தான்
இதே தங்கத்தினை எந்தவொரு விலையிலும் வாங்குவது நீண்ட காலத்திற்கு லாபகரமானது என்று மோனார்க் நெட்வொர்க் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் வைபவ் ஷா தெரிவித்துள்ளார். இவரும் தங்கத்தினை இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம். ஒன்று பிசிகல் தங்கம் மற்றொன்று கோல்டு இடிஎஃப். இது நீண்ட கால நோக்கில் கைகொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வலுவான ரூபாய் மதிப்பே காரணம்
இதே ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் விலையானது 252 ரூபாய் குறைந்து, 52,155 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வலுவான ரூபாயின் மதிப்பு என்றும் தெரிவித்துள்ளது. இதே கடந்த வியாழக்கிழமையன்று 52,407 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே வெள்ளியின் விலையும் 462 ரூபாய் ஏற்றம் கண்டு 68,030 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ரூபாய் நிலவரம்
கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 43 பைசா அதிகரித்து, 73.39 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரம் அமெரிக்கா டாலரின் மதிப்பானது சற்று வலுவிலந்தும் காணப்பட்டது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகளும் அதிகரித்துள்ளன.
நல்ல வாய்ப்பு
எனினும் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று வலுவான நிலையிலேயே காணப்பட்டது, குறிப்பாக தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 1949 டாலராகவும், இதே வெள்ளி விலையானது அவுன்ஸூக்கு 27.33 டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் வரும் வாரங்களில் தங்கம் விலையானது குறையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளது, நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகத் தான் பார்க்கப்படுகிறது.