இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் பல காரணங்களின் எதிரொலியாக அதிகளவிலான மாற்றங்களையும் தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு உள்ளது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிடும் சாமானிய மக்கள் முதல் நகைக் கடைக்காரர்கள் வரையில் குழப்பத்தில் உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் தங்கம் அல்லது தங்கம் நகைகள் வாங்கத் திட்டமிடுவோருக்கு இந்தச் செய்தி மிகவும் உதவியாக இருக்கும். காரணம் தங்கம் விலை பல காரணிகளால் தற்போது அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
MCX சந்தை நிலவரம்
இந்திய வர்த்தகச் சந்தையான MCX சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.13 சதவீதம் உயர்ந்து 45,008 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சுமார் 250 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வெள்ளியின் விலை 67,453 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது
தங்கம் விலை ஏற்பட்டு உள்ள அதிகப்படியான தடுமாற்றத்தின் காரணமாக மக்கள் மத்தியில் தங்கம் மற்றும் தங்க நகை வாங்குவதில் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் நகைக் கடைகள் கடந்த ஒரு வாரம் மிகவும் குறைவான அளவிலான வர்த்தகத்தை மட்டுமே செய்துள்ளது. இதேவேளையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஐபிஓ-விற்குப் பெரிய அளவிலான வரவேற்பும் இல்லை.
அமெரிக்கப் பத்திர முதலீடு
அமெரிக்கப் பத்திர முதலீட்டில் அதிகளவிலான லாபம் கிடைக்கும் காரணத்தால் பிற முதலீட்டுச் சந்தைகளில் இருக்கும் முதலீடுகள் அதிகளவிலான வெளியேறி பத்திர சந்தையில் குவித்துள்ளது. இதன் காரணமாகத் தங்க முதலீட்டுச் சந்தை மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை, கிரிப்டோகரன்சி சந்தையும் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வருகிறது.
டாலரின் மதிப்பு
அமெரிக்காவில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வரும் காரணத்தால் சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இதனால் டாலர் நாணயம் மீண்டும் சர்வதேச நாணய சந்தையில் ஆதிக்கம் செலுத்தித் துவங்கியுள்ளது, இது வளரும் நாடுகளுக்கும், அதிக இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.
தங்கம் உச்ச விலை அளவு
இந்த அதிரடிகளிலும் இந்தியாவில் தங்கம் விலை தனது உச்ச விலையான 56,200 ரூபாயில் இருந்து கிட்டதட்ட 11,000 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது. எனத் தங்கத்தை நீண்ட கால முதலீடாகப் பார்ப்பவர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் நாட்டின் பெரு நகரங்கள் மற்றும் அதிகத் தொற்று இருக்கும் பகுதிகளில் லாக்டவுன் அறிவிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதனால் தங்க வியாபாரிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்துள்ளனர்.
காத்திருப்பது உத்தமம்
இந்தச் சூழ்நிலையில், தங்கத்தைச் சேமிப்பிற்காக வாங்கத் திட்டமிடுவோர் காத்திருந்து வாங்குவது சிறந்தது. கொரோனா தொற்று மற்றும் அமெரிக்கப் பத்திர சந்தை அதிரடிகள் குறைந்த பின்பு தங்கம் விலையில் குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.