தங்கம் விலையானது சமீபத்திய நாட்களாகவே தொடர்ந்து அவ்வப்போது தடுமாற்றத்தினை கண்டாலும், தொடர்ந்து கடும் ஏற்றத்தினையே கண்டு வருகின்றது.
இதற்கிடையில் தற்போது உக்ரைன் ரஷ்யா போர் பதற்றமானது உச்சம் தொட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து பலத்த ஏற்றத்தினை கண்டு வருகின்றது.
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
உச்ச கட்ட பதற்றம்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் வெறும் வாய் வழி பேச்சுவார்த்தைகள், சண்டையாக சென்று கொண்டிருந்த நிலையில், இன்று போர் தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் உக்ரைனின் சில இடங்களை கைபற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச நாடுகள் இதற்கு அதிருப்தி தெரிவித்து வந்தாலும், அது எதனையும் ரஷ்யா காது கொடுத்து கேட்கவில்லை எனலாம்.
எச்சரிக்கை
குறிப்பாக உக்ரைனின் தலை நகரையே தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விமான நிலையம் தொடங்கி, துறைமுகங்கள் வரையில் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. உக்ரைனின் கருங்கடலை ஓட்டியுள்ள முக்கிய பகுதிகளில் தீவிரமாக தாக்குதலையும் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் பிற நாட்டினர் யாரும் தலையிட்டால்,அவர்கள் இதுவரை சந்தித்திராத வரலாறு காணாத அளவு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.
பொருளாதார சரிவு
இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைனின் பொருளாதாரம் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் இதன் தாக்கம் இருக்கலாம். ஏற்கனவே கச்சா என்ணெய் விலையானது இதன் காரணமாக எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரலுக்கு 100 டாலர்களை எட்டியுள்ளது. இதற்கிடையில் தற்போது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையும் தொடர்ந்து உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
குழப்பமான நிலை
தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றமானது எப்போது முடியும். இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற தெளிவான நிலையும் இல்லை. ஆக இது பொருளாதார ரீதியாகவும் எந்த அளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. மேலும் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையும் பணவீக்கத்தினை இன்னும் தூண்டலாம். இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
பாதுகாப்பு புகலிடம்
மேற்கண்ட அரசியல் பதற்றம், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது உச்சம் தொடலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் சப்ளையில் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளும் ரஷ்ய வங்கிகள் மற்றும் வணிகர்கள் மீது தடை விதிக்க தொடங்கியுள்ள நிலையில், இது மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பலத்த ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 27.65 டாலர்கள் அல்லது 1.44% அதிகரித்து, 1937.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முன்னதாக 1950.50 டாலர்கள் வரையில் சென்று, தற்போது சற்றே குறைந்துள்ளது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இது டபுள் டாப் பேட்டர்னையும் உடைத்துள்ளது. ஆக டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது மிக வலுவான ஏற்றத்தினை காணலாம் என்பது போலவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி
தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் கிட்டதட்ட 2% அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.65% அதிகரித்து, 24.955 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை பலத்த ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 940 ரூபாய் அதிகரித்து, 51,332 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது பலத்த ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 1333 ரூபாய் அதிகரித்து, 65,900 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 92 ரூபாய் அதிகரித்து, 4,827 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 736 ரூபாய் அதிகரித்து, 38,616 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 5266 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 42,128 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.60 பைசா அதிகரித்து, 70.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 706 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1600 ரூபாய் அதிகரித்து, 70,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகின்றது. இது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.