இந்திய மக்களின் கலாச்சாரத்தோடும், வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கலந்துள்ள தங்கம், நமது வாழ்வின் அனைத்து சுப காரியங்கள் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் தங்கத்தின் தேவையானது இந்த கொரோனா காலகட்டத்தில் சற்று குறைந்தாலும், மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
அதோடு மக்களும் தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பால், எவ்வளவு தான் விலை அதிகரித்தாலும், தங்கம் வாங்கும் அளவை குறைத்தார்களே தவிர, அதனை வாங்காமல் நிறுத்தவில்லை. ஆக தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், குறைந்திருந்தாலும் மக்களால் தவிர்க்க முடியாத ஆபரணமாகி விட்டது. அந்தளவுக்கு நம்மவர்களுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.
என்னவெல்லாம் பார்க்கலாம்?
அதெல்லாம் சரி கடந்த வாரத்தில் தங்கம் விலை எப்படி இருந்தது? சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு ஏற்றம் சரிவு? தங்கம் ஆபரணம் விலை எவ்வளவு? இனி கூடுமா? குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த சப்போர்ட் அன்ட் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்ன? அடுத்த என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.
ஆபரண தங்கம் விலை
தங்கம் விலையானது கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் மத்தியில் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நிபுணர்களின் கணிப்பானது சற்றே ஆறுதல் தரும் விதமாக கணிப்புகளை கொடுக்க தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர். எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையானது, வரவிருக்கும் பண்டிகை காலங்களில் தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக விலை சரிவினைக் தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச தங்கம் நிலவரம்?
சர்வதேச சந்தையில் கடந்த வார தொடக்கத்தில் சற்று சரிவினைக் கண்டிருந்தாலும், அதற்கடுத்தாற்போல் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஏற்றத்தினைக் கண்டு, பிறகு வாரத்தின் கடைசி நாள் சரிவினைக் கண்டு முடிவடைந்தது. முந்தைய வாரத்தில் தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் சற்றே சரிவினைக் கண்டிருந்தாலும், சராசரியாக ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
கடந்த வார விலை நிலவரம்
கடந்த திங்கட்கிழமையன்று அவுன்ஸ் தங்கம் 1845 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக கடந்த வியாழக்கிழமையன்று 1902 டாலர்கள் வரை சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவு விலை 1887.00 டாலர்களாக முடிவுற்ற நிலையில், குறைந்தபட்சமாக 1820 டாலர்கள் வரை கடந்த திங்கட்கிழமையன்று சென்று திரும்பியள்ளது குறிப்பிடத்தக்கது.
காமெக்ஸ் வெள்ளி நிலவரம்
தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் பலத்த ஏற்றத்தினைக் கண்டது. வார தொடக்கத்தில் சற்று சரிவினைக் கண்டிருந்தாலும், தொடர்ச்சியாக நல்ல ஏற்றத்தினைக் கண்டது. எனினும் வார இறுதியில் சற்று சரிவிலேயே முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று வெள்ளி விலை தொடக்கத்தில் 24.140 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 26.305 டாலர்களாக அதிகரித்தது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் 26.003 டாலர்களாகவும் முடிவுற்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை, கடந்த வாரத்தில் நல்ல ஏற்றத்தினைக் கண்டுள்ளது. கடந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை 10 கிராமுக்கு 49,101 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 50,642 ரூபாயாக அதிகரித்தது. இதே கடந்த திங்கட்கிழமையன்று குறைந்தபட்சமாக 48,602 ரூபாய் வரை சென்று திரும்பியது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 50,304 ரூபாயாக முடிவுற்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், கடந்த வாரத்தில் பலத்த ஏற்றத்தில் தான் காணப்பட்டது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை முந்தைய வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று 63,842 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்று அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 68,398 ரூபாய் வரையில் சென்றது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவு விலையானது கிலோவுக்கு 67,907 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று சற்று குறைந்து காணப்பட்டாலும், அதன் பிறகு தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வருகிறது. திங்கட்கிழமையன்று சவரனுக்கு 36,888 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகபட்சமாக 37,952 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சவரனுக்கு 1,064 ரூபாய் அதிகரித்துள்ளது.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் கடந்த திங்கட்கிழமையன்று சற்று குறைந்து காணப்பட்டாலும், அதன் பிறகு தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வருகிறது. திங்கட்கிழமையன்று 10 கிராம் தூயதங்கத்தின் விலையானது 50,310 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகபட்சமாக 51,750 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 71.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 716 ரூபாயாகவும், கிலோவுக்கு 71,600 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் விலையும் தங்கத்தினை போலவே தொடர்ச்சியாக ஏற்றத்தினைக் தான் கண்டு வருகின்றது. வார தொடக்கத்தில் 66,700 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, நேற்று அதிகபட்சமாக 71,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 4,800 ரூபாய் அதிகரித்துள்ளது. .
ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் என்ன சொல்கிறது?
சர்வதேச சந்தையில் கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், தங்கம் சற்று ரிஸ்கான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதோடு பங்கு சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகளும், அமெரிக்க தேர்தல் முடிவுகளும் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளன. இதனால் கடந்த சில வர்த்தக தினங்களாக முதலீட்டாளர்களின் உணர்வு சற்றே மேம்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளார்கள் பங்கு சந்தைகளில் முதலீட்டினை செய்து வருகின்றனர்.
தடுப்பூசியால் மேம்படும் முதலீடு
கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், தங்கம் விலையானது கடந்த சில அமர்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்தாலும், தங்கம் விலையானது அழுத்தத்திலேயே உள்ளது. அதோடு பொருளாதார வளர்ச்சி, வர்த்தக கொள்கைகள், கணிப்புகள் இனி தங்கம் விலையை மேலும் கட்டுப்படுத்தலாம். எனினும் குறைந்த அளவிலான வட்டி விகிதம் தங்கத்தின் அதிக விலை சரிவினைக் கட்டுப்படுத்தக்கூடும். ஆக தங்கம் குறித்தான எங்களது நிலைப்பாடு நடு நிலையாக உள்ளது எனவும் ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்
பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதன் காரணமாக சந்தைகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் பங்கு சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் தொடர்ந்து புதிய உச்சம் தொட தொடங்கியுள்ளன.
கோடக் செக்யூரிட்டீஸ் என்ன சொல்கிறது?
மீண்டும் தூண்டுதல் தொகுப்பு எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அது தங்கம் விலையில் எதிரொலிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் இன்னும் ஈடிஎஃப் தங்கத்தினை வாங்கவில்லை என்றே நாங்கள் கருதுகிறோம். ஆக தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் இன்னும் வாங்க ஆரம்பிக்கவில்லை என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளது.
கோல்டுமேன் சாச்சஸ் என்ன சொல்கிறார்?
தங்கம் மற்றும் பிட்காயின் இரண்டும் இணைந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினைக் கொடுக்கலாம். ஆக இது பாதுகாப்பு புகலிடத்திற்கு எந்த ஆபரத்தினையும் ஏற்படுத்தாது என நம்புவதாக தெரிவித்துள்ளது. சமீபத்திய அறிக்கைகள் பணவீக்கத்திற்கு எதிராக தங்கத்திற்கு பதிலாக பிட்காயினை ஹெட்ஜிங் ஆக மாறி வருவதாக கூறியுள்ளன. அதோடு பிரபலமடைந்து வரும் பிட்காயின் வளர்ச்சி, தங்கத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறுகின்றனர். ஆனால் அப்படி இருப்பதாக தெரியவில்லை என்று கோல்டுமேன் சாச்சஸ் தெரிவித்துள்ளது.
ஜெப்ஃபெரிஸ் கணிப்பு
சர்வதேச பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், அமெரிக்கா டாலர் மதிப்பு சற்று மிதமான அளவு பலவீனமாகலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பிரித்து செய்ய பரிந்துரைப்பதாக ஜேபி மார்கனின் அவுட்லுக் 2021 அறிக்கையினை சுட்டிக் காட்டியுள்ளது.
கிரெடிட் சூசி என்ன சொல்கிறது?
கிரெடிட் சூசி தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் காணலாம் என்றே கணித்துள்ளது. இது 2021ல் தங்கம் விலையானது சராசரியாக அவுன்ஸுக்கு 2,100 டாலர்களையும், இதே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அவுன்ஸூக்கு 2,200 டாலர்களையும் தொடலாம் என கணித்துள்ளது. எனினும் இது அதன் முந்தைய கணிப்பான 2500 டாலர்கள் என்பதனை விட குறைவு தான்.
தங்கம் விலை சரிவினைக் காணலாம்
தங்கம் விலையானது 8-10% சரிவினைக் காணலாம். இது மீண்டு வரும் பொருளாதாரம், கொரோனா தடுப்பூசி என பல காரணங்களினால் சரிவினைக் காணலாம்.
இதற்கிடையில் தங்கம் விலையானது 40,000 - 40,500 ரூபாய் வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அடுத்த ஆண்டில் 40,000 - 50,000 ரூபாய் வரையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வரவிருக்கும் விழாக்காலங்களில் அதிக தேவை காரணமாக சற்றே ஏற்றத்தினைக் காணலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேற்கண்ட இந்த கணிப்புகள் நிபுணர்களின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆக முதலீட்டாளர்கள் சற்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.