கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன? ஏன் திடீரென்று வீழ்ச்சி? அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வந்த பதற்றம் உச்ச கட்டத்தில் இருந்த நிலையில், போர் வெடிக்கும் அபாயம் நிலவி வந்தது. இதனால் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டு வந்தது.
எங்கே போர் ஏற்பட்டால் உலகப்பொருளாதாரம் என்னவாகும். ஏற்கனவே நிலவி வரும் பிரச்சனைக்கே கச்சா எண்ணெய் விலை கன்னாபின்னாவென்று ஏறிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் ஏற்படும் நிலை நிலவி வருகிறது.
நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு தயார்
முன்னதாக சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பு கருதி பங்கு சந்தைகளை தவிர்த்து, தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்கம் விலையானது கிடுகிடுவென்று ஏறிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், எந்த விதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சுலைமானி கொலை பற்றி விளக்கம்
ஈரானின் ராணுவத் தளபதி சுலைமானியை தற்காப்புக்காகவே கொலை செய்தோம் என்றும் ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதத்தில் விளக்கம் கொடுத்துள்ளது அமெரிக்கா. எனினும் சுலைமானி இறுதிச் சடங்கு நடந்த சில மணி நேரங்களுக்கு உள்ளேயே ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்கா சற்று நிலைகுலைந்து போனது என்று தான் கூறவேண்டும்.
பாதுகாப்பு கருதி பேச்சு வார்த்தை
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கருதி பிரச்சனை ஏதும் விளைவிக்காமல் இருக்கவும், ஈரான் அரசு மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கவும், ஈரான் தரப்புடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநாவுக்கு ஈரான் கடிதம்
அதிலும் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீடிக்கும் சூழலில், அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. இதே ஐநா பாதுகாப்பு சபைக்கு ஈரான் எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் தரப்பு போரையோ நிலைமை மோசமாவதையோ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை வீழ்ச்சி
ஆக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றத்துக்கு முடிவு வரும் என்ற நிலையில், தங்கம் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச சந்தைகளின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது விலை குறைந்திருந்தாலும் நேற்றைய உச்ச விலையானது 41,293 ரூபாயாகும். உச்சத்திலிருந்து 2313 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய தங்கத்தில் குறைந்தபட்ச விலையானது 39,610 ரூபாயாகும், எனினும் தற்போது 39,811 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் விலை
சர்வதேச சந்தையில் நேற்றைய உச்ச விலையானது அவுன்ஸூக்கு 1613.30 டாலராகும். இதே இன்றைய குறைந்த பட்ச விலையானது 1541.15 டாலர்களாகும் உள்ளது. எனினும் தற்போது விலை 1548.45 டாலர்களாகும் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக நேற்றைய உச்சத்திலிருந்து அவுன்ஸூக்கு 72.15 டாலர்கள் குறைந்துள்ளது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஆபரண தங்கத்தின் விலையானது, இன்று கிராமுக்கு 97 ரூபாய் குறைந்து 3830 ரூபாயாகவும், இதே 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 776 ரூபாய் குறைந்து 30,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் வரவிருக்கும் பொங்கல் பண்டிகை காலத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.