நம் மக்களில் பொன்நகைக்கு மயங்காத மக்களே இல்லையென்று கூறலாம். அந்தளவுக்கு நம் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது தங்கம்.
இந்த நிலையில் சீனாவின் தோற்றுவிப்பான கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால் தற்போது சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் தற்போது ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் பார்வையும், பாதுகாப்பு புகலிடமாக திகழும் தங்கம் மீது திரும்பியுள்ளது எனலாம். இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உச்சம் தொட்ட தங்கம் விலை
இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை எவ்வளவு? குறைந்திருக்கா, கூடியிருக்கா என்றால் நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதே கடந்த பிப்ரவரி 24 அன்று அதிகபட்சமாக கிராமுக்கு 4,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. சொல்லப்போனால் சவரனுக்கு 32,800 ரூபாயை தொட்டது.
சற்று விலை குறைவு தான்
ஆனால் இன்று கிராமுக்கு 3,988 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 31,904 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆக கடந்த பிப்ரவரி 24வுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு கிட்டதட்ட 900 ரூபாய் குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். இன்று விலை சற்று அதிகரித்து இருந்தாலும், கடந்த வாரத்தோடு ஒப்பிடும்போது விலை சற்று குறைவு தான்.
தங்கம் ஒரு முதலீட்டு உபகரணம்
பொதுவாக தங்கம் விலை சர்வதேச சந்தை நிலவரத்தையும், சர்வதேச காரணிகளை பொறுத்து தான் இந்தியாவில் வர்த்தகமாகும். அப்படி இருக்கையில் இந்தியாவில் வர்த்தகமாகும் இந்த விலை வீழ்ச்சியானது நிரந்தரமானது அல்ல என்று தெரிய வைக்கிறது. ஏனெனில் இந்தியாவில் தான் பெரும் அளவு தங்கம் ஆபரணமாக பயன்படுத்தப்படுகிறது. இதே மற்ற நாடுகளில் அதிகளவில் ஒரு முதலீட்டு உபகரணமாக பயன்படுத்தப்படுகிறது.
தங்கத்தின் மீது கவனம்
கொரோனாவின் தாக்கத்தினால் சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி முதலீடுகளை தங்கத்தின் மீது திருப்பியுள்ளனர். இதுவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பற்பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்துள்ள கொரோனாவால் பல நாடுகளின் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பயம் நிலவி வருகிறது. இதனால் தற்போது ஒட்டுமொத்த உலகின் பார்வையும் தங்கத்தின் மேல் விழுந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச சந்தையில் விலை நிலவரம்
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 36.25 டாலர்கள் அதிகரித்து 1,602 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 2.32% அதிகமாகும். கடந்த வார இறுதியில் சற்று வீழ்ச்சியைக் கண்டிருந்தாலும், நடப்பு வாரத்தில் சீனாவின் தொழில் சாலைகள் மற்றும் உற்பத்தி குறித்தான அறிக்கைகள், அதுவும் கொரோனா வெடிப்புக்கு பின்பு எடுக்கப்படும் முதல் கணிப்பு இதுவேயாகும். ஆக இதன் எதிரொலி நிச்சயம் சர்வதேச சந்தைகளில் காணப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் ஒர் அறிக்கையில் கூறியுள்ளனர்.
கமாடிட்டி வர்த்தகத்தில் விலை
இதன் தாக்கம் நிச்சயம் தங்கம் விலையிலும் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சரி சர்வதேச சந்தையில் தான் தங்கம் விலை இப்படி என்றால், இந்தியா கமாடிட்டி வர்த்தகத்தில் விலை எவ்வாறு வர்த்தகமாகி வருகிறது என்று கேட்கிறீர்களா? தற்போது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது 463 ரூபாய் அதிகரித்து, 41,865 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இப்படித் தான் தங்கம் விலை
அதிலும் நாட்டின் முதன்மை பொருளாதார நாடான அமெரிக்காவிலும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா ஏதேனும் தீவிர நடவடிக்கையினை எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் கொரோனா தாக்கத்திற்கு சரியான முடிவு தெரியும் வரையில் தங்கம் விலை இப்படி பலமான ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.