பொதுவாக தங்கம் என்றாலே அனைவருக்கும் பிடித்த உலோகமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இதனை அணிகலனுக்காக மட்டுமே வாங்கி வந்த நிலையில், தற்போது முக்கிய முதலீட்டு ரீதியிலும் வாங்கி வைக்கிறார்கள் மக்கள்.
அதிலும் இன்றைய நடுத்தர குடும்பங்களில் தங்கமானது, மிக அவசர தேவைகளில் முக்கிய ஆசானாக இருந்து வருகிறது.
சில காலம் செய்கூலி சேதாரம் என அனைத்தும் கொடுத்து தங்க நகையாக வாங்கி வைத்தவர்கள், அதன் பின்னர் தங்க காயின்களாகவும், தங்க பார்களாகவும் வாங்கி வைக்க ஆரம்பித்தனர். ஆனால் அதனை திரும்ப மாற்றும் போது அதிலும் பிரச்சனைகள் வரவே, பின்னர் பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பேப்பர் தங்கம்
அதென்ன பேப்பர் தங்கம் என்று தானே கேட்கிறீர்கள். எம்சிஎக்ஸ், தங்கப் பத்திரம் இப்படி பல வகை முதலீடுகள் உள்ளன. இவற்றில் நாம் நமது பேரில் உள்ள டீமேட் கணக்கின் மூலம் நமது கணக்குகளில் பணத்தை செலுத்து தங்கத்தினை வாங்கி வைப்போம். அதில் அன்றாட விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப லாபம் சம்பாதிக்க முடியும்,. இதில் தங்கத்தினை நாம் கையில் வாங்குவதில்லை. ஆதலால் இதனை பேப்பர் தங்கம் அழைக்கப்படுகிறது.
வரலாறு காணாத விலையேற்றம்
சரி அதெல்லாம் விடுங்க. இன்னைக்கு தங்கம் விலை எப்படி உள்ளது. வாருங்கள் அதையும் பார்க்கலாம். சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் கொரோனாவின் தாக்கத்தினால், சர்வதேச பங்கு சந்தைகள் தாறுமாறான இறக்கத்தினை கண்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது தாறுமாறாக ஏற்றம் கண்டு வந்தது. இதனால் இந்தியாவிலும் விலை வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டது.
சர்வதேச சந்தையில் விலை
சர்வதேச சந்தையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அவுன்ஸூக்கு 1657.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேறைய உச்சமாக 1703.80 டாலர்களாக கண்டு வந்த நிலையில், இன்று தற்போது வரையிலான குறைந்த பட்ச விலை 1654.30 டாலர்கள் வரையிலும் குறைந்து வர்த்தகமாகியுள்ளது. ஆக மொத்தம் இரண்டு நாளில் 49.5 டாலர்கள் குறைந்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை
இதே எமசிஎக்ஸ் சந்தை ஹோலி காரணமாக மாலை நேர சந்தை மட்டும் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆக இதன் எதிரொலி இன்று மாலையில் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதே நேற்றைய சந்தை முடிவில் தங்கம் விலையானது 195 ரூபாய் அதிகரித்து 44,353 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே வெள்ளியின் விலையானது 258 ரூபாய் குறைந்து 46,711 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஆபரணம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் கிராமுக்கு 4,199 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 33,952 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே வெள்ளியில் விலை கிராமுக்கு 49.03 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கிலோவுக்கு 49,030 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை அதிகரிக்கலாம்
குறுகிய கால நோக்கில் தங்கம் விலையானது அதிகளவிலான ஏற்றம் இறக்கம் கண்டாலும், நீண்டகால நோக்கில் சற்று ஏற்றம் காணலாம். ஏனெனில் தொடர்ந்து பத்திர விளைச்சலானது குறைந்து வருகிறது. அது முதலீட்டாளர்களின் கவனத்தினை தங்கத்தின் பக்கம் திருப்பலாம். ஆக தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 1,700 டாலர் முதல் 1,725 டாலர்கள் வரையில் வர்த்தகமாகலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
விலையேற்றத்துக்கு காரணம்
மேலும் பரவி வருகின்ற கொரோனா வைரஸால் தொடர்ந்து தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுக்கிறது. ஏனெனில் சர்வதேச அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என்ற உணர்வுகளே முதலீட்டாளர்களின் மத்தியில் நிலவி வருகிறது. இதனால் விலையானது சற்று அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.