இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 மாத உயர்வை தொட்டு சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்குவோர் தொடர்ந்து வாங்கி வந்தாலும் சேமிப்புக்காகத் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் இந்த விலை உயர்வின் காரணமாகச் சரிந்துள்ளது.
இன்றைய விலை உயர்வுக்கு என்ன காரணம்..? தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்வது சரியா..? வாங்க பார்ப்போம்.
MCX சந்தை விலை
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர்ஸ் விலை 0.34 சதவீதம் அதிகரித்து 53,685.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர்ஸ் விலை 0.76 சதவீதம் அதிகரித்து 65,683 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தை விலை
ஆனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்று அதிகப்படியாக 1798 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 1768 டாலர் வரையில் சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பங்குச்சந்தை முதலீடுகள் சூடுபிடித்து வரும் நிலையில் தங்கம் மீதான முதலீடுகள் சர்வதேசச் சந்தையில் குறைந்து வருகிறது.
டிசம்பர் 1 விலை
டிசம்பர் 1 ஆம் தேதி 1803 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் ரெசிஷன் அச்சம் அதிகமாக இருந்த நிலையில் அடுத்தடுத்து மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்திய காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் பத்திர சந்தை மீது திரும்பியது.
நவம்பர் மாதம் முதல் உயர்வு
ஆனால் நவம்பர் மாதம் முதல் இந்நிலை மாறி வட்டி விகித உயர்வின் வேகம் குறைப்பதாக அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் மத்தியிலான பேச்சு நிலவியது. இதே காலக்கட்டத்தில் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்புத் தரவுகள் மேம்பட்டதால் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் துவங்கியது.
ஒரு அவுன்ஸ் தங்கம்
இதன் வாயிலாக நவம்பர் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,628 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் 1 ஆம் தேதி 1803 டாலர் வரையில் உயர்ந்தது.ஆனால் இந்தியாவில் விழாக்காலம், திருமண சீசன் எனப் பல காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்தியா
இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் எப்போதும் குறையாது, குறிப்பாகத் திருமண சீசன் என்பதால் தங்கம், வெள்ளி விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்கள் நகை கடைகளில் அலைமோதி வருகின்றனர்.
வர்த்தகம்
இதற்கு ஏற்றார் போல் நகை கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் சின்னச் சின்ன நகரங்களிலும் தனது பெரிய பிராண்டுகளின் கடைகள் திறந்து வருகிறது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்கம் இறக்குமதி
தங்கம் இறக்குமதி மீது மத்திய அரசு போட்டுள்ள வரி காரணமாக தங்க நகைகளின் விலை அதிகரித்துள்ளது சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்த வரி காரணமாக இந்தியாவில் தவறான முறையில் கொண்டு வரும் தங்கம் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதல் நடவடிக்கையை எடுத்து வருகிறது.