தங்கம் விலை இரண்டு நாள் சரிவுக்குப் பின்பு இன்று அதிகரித்துள்ளது, இந்தத் திடீர் உயர்வுக்குப் பின் பல முக்கியக் காரணங்கள் உள்ளது. பொதுவாகத் தங்கம் விலை இரு காரணிகளை அடிப்படையில் மாறுபடும்.
ஒன்று உள்நாட்டில் இருக்கும் டிமாண்ட், முதலீட்டு அளவுகள் வைத்துத் தீர்மானிக்கப்படும், இரண்டாவது சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் வைத்து இந்தியாவில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும்.
இந்நிலையில் இன்றைய விலை உயர்வுக்கு என்ன காரணமாக இருக்கும்.
இந்தியாவின் நிலை
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையிலும், கொரோனா மூலம் இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதேவேளையில் இந்திய மக்களுக்குப் போதுமான வேக்சின் தயாரிக்க இன்னமும் ஈடு செய்ய முடியாத நிலை தான் உள்ளது. இதனால் மக்கள் செலவு செய்யும் அளவீடு குறைந்துள்ளது, இதேபோல் நுகர்வோர் சந்தை மீதான நம்பிக்கையும் வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ளது.
தங்கத்திற்கான டிமாண்ட் குறைவு
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது. சீல வாரங்களுக்கு முன்பு அட்சய திருதியை நாளில் கூடத் தங்கம் விற்பனை என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது. எனவே தங்கம் விலை உயர்வு சர்வதேச சந்தைகள் காரணமாக விளங்குகிறது.
அமெரிக்கப் பத்திர முதலீடு
அமெரிக்கப் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவீடுகள் அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் கணிசமான முதலீடுகள் அமெரிக்கப் பங்குச்சந்தையிலும், தங்க முதலீட்டுச் சந்தையிலும் குவித்துள்ளது. இதன் வாயிலாக நேற்று இரவு வர்த்தகத்தில் இருந்து தங்கம் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா தரவுகள்
இதுமட்டும் அல்லாமல் இந்த வாரம் அமெரிக்கப் பணவீக்க தரவுகளும், ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கை கூட்டத்தின் முடிவுகளும் வெளியாக உள்ளது. இவை இரண்டும் முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டு உள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறனர்.
அமெரிக்க முதலீட்டாளர்களின் நிலை
இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் 10 வருடப் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவீடுகள் குறைந்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் நீண்ட காலம் இருப்பு வைத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். பணவீக்க தரவுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இருந்தால் கட்டாயம் பத்திர சந்தை பாதிக்கும்.
தங்கம் மீது முதலீடுகள்
இதனால் பெருமளவிலான முதலீடுகள் தங்கம் மீது திரும்ப வாய்ப்பு உள்ளது, எனவே அடுத்த வாரம் முதல் தங்கம் விலை தற்போதைய அளவீட்டில் இருந்து பெரிய அளவில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதால் தங்கம் வாங்கத் திட்டமிடுவோர் இப்போதே வாங்குவது சிறந்தது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
புதன்கிழமை சர்வதேச புல்லியன் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1895.57 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. நேற்றைய இரவு வர்த்தகத்தில் மட்டும் தங்கம் விலை 1890 டாலரில் இருந்து 1910 டாலர் வரையில் உயர்ந்தது, இதன் தாக்கம் தான் தற்போது இந்திய சந்தையில் எதிரொலித்துள்ளது என்றால் மிகையில்லை.
எம்சிஎக்ஸ் சந்தை விலை
இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை என்பது 0.09 சதவீதம் அதிகரித்து 49,170 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.11 சதவீதம் வரையில் அதிகரித்து 71,309.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
தங்கம் வாங்குவது சரியா..?!
எனவே தங்கம் வாங்கத் திட்டமிடுவோர் அடுத்த 2 நாட்களில் தங்கம் வாங்குவது சிறந்தது. அமெரிக்காவின் பணவீக்க தரவுகளும், ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கை கூட்டத்தின் முடிவுகளும் வெளியான பின்பு தங்கம் விலை உயர வாய்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது என்றால் மிகையில்லை.