தங்கத்தின் மீது ஆசைப்படாத பெண்ணும் இல்லை. தங்கத்தில் முதலீடு செய்யாத ஆணும் இருப்பது அரிது. அந்தளவுக்கு நம் மக்களின் ரத்தத்தில் ஒன்றாக கலந்திருப்பது தங்கம்.
பிறந்த குழந்தை முதல் கொண்டு வயதான முதியோர் வரை விரும்பி ஆபரணங்களில் ஒன்றான, தங்கத்தின் விலை கடந்த ஐந்து தினங்களாக குறைந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றம் தான், இந்திய சந்தைகளில் நிகழும். எனினும் அவ்வப்போது இந்திய ரூபாயின் மாற்றமும், தங்கத்திற்கான தேவையும் ஆபரண தங்கத்தில் எதிரொலிப்பது உண்டு. கடந்த ஐந்து தினங்களாகவே சர்வதேச சந்தையில் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
பெரிய அளவில் மாற்றம் இல்லை
இந்த சர்வதேச சந்தையில் கடந்த ஐந்து தினங்களாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இந்தியாவில் விலை ஏற்ற இறக்கம் கண்டு கொண்டு தான் இருக்கிறது. அதிலும் கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே, கிராமுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என குறைந்து வர்த்தகமாகி வருகிறது. எனினும் கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 29,120 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் எப்படி?
இதே சர்வதேச சந்தையில், கடந்த ஐந்து சந்தை தினங்களாகவே சிறிது சிறிதாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இன்று காலை முதல் மேலும் சரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் புதன் கிழமையன்று அதிகபட்சமாக அவுன்சுக்கு 1486 டாலராக வர்த்தகமாகி வந்த தங்கத்தின் விலை, இன்று தற்போது அவுன்சுக்கு 1465.45 டாலராக வர்த்தகமாகியும் வருகிறது. மேலும் இன்னும் சரிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான குறியீடுகள் சாதகமாக உள்ளதே இதற்கு காரணம்.
இந்திய கமாடிட்டி சந்தையில் எப்படி
இந்திய கமாடிட்டி சந்தையை பொறுத்தவரையில் 37850 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தொடர்ந்து மூன்று நாளாகவே சற்று சரிந்து வருகிறது. இது கடந்த வார உச்சத்திலிருந்து கிட்டதட்ட 400 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. தங்கம் விலை சரிந்து வரும் இதே வேளையில் தான் வெள்ளியின் விலையும் குறைந்து வருகிறது.
அமெரிக்கா- சீனா வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க தேசிய பாதுக்காப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் சீனாவுடனான ஒரு வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் சாதகமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப் நிர்வாகம் ஹாங்காங்கில் என்ன நடக்கிறது என்பதில் கண்மூடித்தனமாக இருக்காது என்றும் கூறியுள்ளார். அப்படி ஒரு வேளை வர்ததக ஒப்பந்தம் சாதகமாக இருப்பின் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையும், இதனால் விலை குறையலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
உற்பத்தி குறித்த குறியீடு
இதே அமெரிக்காவின் பர்சேசிங் மேனேஜர்ஸ் என்ற அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான குறியீடு, கடந்த நவம்பர் மாதத்தில் ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் இது எதிர்பார்த்ததை விட மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்து வருவதையே இந்தக் குறியீடு சுட்டிக் காட்டுகிறது.
இந்தியாவில் விலை குறையவில்லை
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த இரண்டு மாதங்களாகவே தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்டிருந்தாலும், இந்தியாவில் தங்கம் சில்லறை விற்பனையில் பெரிய அளவில் குறையவில்லை. அதிலும் பலவீனமான தேவை இருந்த போதிலும் விலை அதிகரித்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டில் இது வரை 20 சதவிகிதம் தங்கம் விலை உயர்ந்துள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
தள்ளுபடி இருந்தாலும் வரி அதிகம்
மேலும் இந்தியாவில் விற்பனையாளர்கள் கடந்த வாரம் அவுன்சுக்கு 3 டாலர்கள் தள்ளுபடி கொடுத்தனர். எனினும் இதற்கு முந்தைய வாரம் அவுன்ஸ் தங்கத்திற்கு 1.5 டாலர் பீரிமிய விலையுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவு தான் என்று கூறப்படுகிறது. எனினும் இந்தியாவில் உள்நாட்டு விலையில் 12.5 சதவிகித இறக்குமதி வரி மற்றும் 3 சதவிகித ஜிஎஸ்டி வரி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் இறக்குமதி வீழ்ச்சி
இந்தியாவில் தொடர்ந்து தங்கம் இறக்குமதியும் சரிந்து வருகிறது. இது கடந்த அக்டோபரில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு சரிந்தது. தங்கம் இறக்குமதியில் உலகின் மிகப் பெரிய நாடாகத் திகழும் இந்தியா, தனது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிகளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. அதிலும் ஆபரணங்கள் தயாரிப்புக்குத் தங்கம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மாற்றம் இருந்தாலும், இந்தியாவில் அதிக வரி விகிதங்களால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும், இந்திய சந்தைகளில் குறைவதில்லை.
தேவை அதிகரிக்கலாம்
எப்படி எனினும் அமெரிக்கா சீனா ஒப்பந்தத்திற்கு ஒரு விடிவுகாலம் இருந்தால் மட்டுமே, விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். இதே இந்திய சந்தைகளை பொறுத்த வரை இது பெரிய அளவில் தற்போதைக்கு மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஏனெனில் வரவிருக்கும் வாரங்களில் முகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால், தேவை என்பது அதிகரிக்கும். இதனால் விலை பெருமளவில் குறைய வாய்ப்புகள் குறைவே.