கொரோனா வந்தாலும் தொழில் துறை தேக்கமடைந்தாலும், தங்கத்தின் விலை மட்டும் குறையவில்லை. மாறாக முதலீட்டாளர்கள் இந்த நெருக்கடியான காலத்தில், பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடுகளை செய்து வருவதால் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனினும் கடந்த பல மாதங்களாகவே லாக்டவுனினால் முடங்கியிருந்த பொருளாதாரம், தற்போது தான் சற்று துளிர் விடத் தொடங்கியுள்ளது.
ஏனெனில் தற்போது இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள், லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளித்துள்ளன. இது பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமையும் என்ற உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
தொழில்கள் வழக்கம்போல இல்லை
ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பெரும்பான்மையான தொழில்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு புறம் ஆள் பற்றாக்குறை. மறுபுறம் சரியான மூலதன பொருட்கள் கிடைக்காமை, மற்றும் விநியோக சங்கிலி பாதிப்பு, லாகிஸ்டிக்ஸ் பிரச்சனை என பலவும் இருந்து வருகிறது. ஆக லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் சில நிறுவனங்கள் செயல்படாமலேயே இருந்து வருகிறது.
இதுவும் ஒரு காரணம்
மேலும் தங்கம் விலையை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, அமெரிக்க சீன பதற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மத்திய வங்கிகளிடம் அதிக ஊக்குவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இதுவும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
பயணிகள் விமானத்துக்கு தடை
மேலும் தற்போது அமெரிக்கா சீனா பதற்றத்தினை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஜூன் 16 முதல் பயணிகள் விமானம் பறக்க தடை விதித்துள்ளது. முன்னதாக அமெரிக்கா தங்கள் பயணிகள் விமான சேவையினை சீனாவுக்கு இயக்க அனுமதி கேட்ட நிலையில், சீனா அதனை நிராகரித்தது. இந்த நிலையில் வரும் 16ம் தேதி முதல் அமெரிக்காவும் தடை செய்துள்ளதாக தெரிகிறது.
பல ஊக்குவிப்பு சலுகை
இதற்கிடையில் இன்று ஐரோப்பிய மத்திய வங்கி அதன் ஊக்குவிப்பு சலுகையை அறிவிக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு அவசரகால பத்திர விற்பனைக்கும் ஊக்குவிப்பு அளித்து வருவதாகவும், இதன் மூலம் பல நூறு பில்லியன் யூரோக்கள் நிதியினை திரட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல இடையூறுகளுக்கும் இடையே தங்க பத்திரங்கள் தான் உலகளவில் அதிக லாபம் ஈட்டியுள்ள ஒரு முதலீடாகவும் அறியப்படுகிறது. ஆக முதலீட்டாளர்களின் கவனம் தொடர்ந்து தங்கத்தின் பக்கமே இருந்து வருகிறது.
தங்கம் விலை அதிகரிக்கும்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்கும் என்ற எண்ணமே நிலவி வருகிறது. ஏனெனில் அமெரிக்கா சீனா பதற்றமானது அதிகரித்து வரும் நிலையில், அது தற்போதைக்கு முடிவடைவதாகவும் தெரியவில்லை. இதனால் சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்ப்படுகிறது. இதன் காரணமாக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இன்று சர்வதேச சந்தையில் விலை நிலவரம்
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் நான்காவது நாளாக தொடர்ந்து தங்கம் விலையானது குறைந்து வருகிறது. தங்கம் விலையானது தற்போது 1.30 டாலர்கள் குறைந்து, அவுன்ஸூக்கு 1,703.60 டாலராக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய தங்கம் பற்றிய செய்தியிலேயே சொல்லியிருந்தோம். தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டனில் செல்லிங் கன்பார்ம் ஆகியுள்ளது என்று.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்தாலும், எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ளது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 91 ரூபாய் அதிகரித்து, 46,094 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு நாள் வீழ்ச்சிக்கு பின்பு இன்று, தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளியின் விலையானது குறைந்து வருகிறது. இது தற்போது 0.040 டாலர்கள் குறைந்து 17.918 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையானது தற்போது சற்று குறைந்திருந்தாலும், அது பெரியளவில் குறையவில்லை.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளி விலையானது தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது. தற்போது 56 ரூபாய் குறைந்து, 48,400 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் தொழில்துறைகள் மீண்டு வர தொடங்கியுள்ள நிலையில், தேவையானது அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது, கடந்த இரண்டு தினங்களாகவே குறைந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி சற்று அதிகரித்துள்ளது. இது கிராமுக்கு 4,469 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 35,752 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் தூய தங்கத்தின் விலையும் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.
வெள்ளி விலை
தொடர்ந்து ஆறு நாள் ஏற்றத்துக்கு பிறகு சற்று, நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு 1,260 ரூபாய் குறைந்து 48,900 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராம் வெள்ளியின் விலை 48.91 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 48,910 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.