கடந்த சில தினங்களாகவே கொரோனாவிற்கு அடுத்தபடியாக பேசப்படும் விஷயம் தங்கம் விலை தான். ஏனெனில் தொடர்ந்து அதிரடியான ஏற்றம் கண்டு வருகிறது. சொல்லப்போனால் அனுதினமும் புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது.
கமாடிட்டி சந்தையில் மட்டும் அல்ல, ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. என்ன தான் காரணம்? எதற்காக இப்படி அனுதினமும் தங்கம் விலையானது புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது.
இது சரிந்து வரும் பொருளாதாரத்தினை சுட்டிக் காட்டினாலும், இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ? தெரியவில்லை.
அதிகரித்து வரும் அமெரிக்கா – சீனா பிரச்சனை
தங்கம் விலையானது அமெரிக்கா டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்களது பயத்தின் காரணமாக தங்கத்தில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர். அதனை இன்னும் வேகப்படுத்தும் விதமாக அமெரிக்கா சீனா பிரச்சனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெளிவாக சொல்லவேண்டுமானால் ஹூஸ்டனை சார்ந்த தூதரகத்தினை மூடுமாறு அமெரிக்கா சீனாவினைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனாவினால் பொருளாதாரம்
உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சரிந்து வரும் பொருளாதார வீழ்ச்சியினை தடுக்க, ஒவ்வொரு நாடுகளும் ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய பொருளாதார ஊக்குவிப்பு சலுகையை அறிவித்த அமெரிக்கா அரசு, அதே போல் இரண்டாவது கட்ட சலுகை பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளும் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தங்களது பொருளாதாரத்தினை ஊக்குவிக்க சலுகைகளை அறிவித்து வருகின்றன.
டாலரின் மதிப்பு சரிவு
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா டாலரின் மதிப்பே கடந்த சில நாட்களாகவே சரிந்து வருகின்றது. குறைவான வட்டி விகிதம் உள்ளிட்ட பல காரணங்களால் பொருளாதாரம் சரிந்து வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. தற்போது வெள்ளியிலும் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.
சரிந்து வரும் சர்வதேச பங்கு சந்தைகள்
சர்வதேச அளவிலான பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், நிறுவனங்கள் தொழில் சாலைகள் என பலவும் முடங்கியுள்ள நிலையில், பங்கு சந்தைகள் சரிந்து வருகின்றன. இதன் காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்து வருகின்றது. ஏனெனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பங்கு விலைகள் இன்னும் சரியலாம் என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
இந்தியா மட்டும் அல்ல, உலக அளவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. உலகம் முழுக்க கொரோனாவினால் 1,56,41,987 பேர் தாக்கம் அடைந்துள்ள நிலையில், 6,35,666 பேர் பலியாகியுள்ளனர். இதே இந்தியாவில் மட்டும் 12,38,635 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,861 பேர் பலியாகியுள்ளனர். ஆக இதுவும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் விலை அதிகரிக்கும்
தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்னும் அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர். சொல்லப்போனால் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலையானது 65,000ரூபாயினை தொடும் என்கிறார்கள் நிபுணர்கள். இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2000 டாலரினை தொடலாம் என்றும் கணித்துள்ளனர். ஆக நிச்சயம் தங்கம் முதலீட்டாளர்களுக்கு இது ஜாக்பாட் தான்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
கடந்த ஐந்து சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை இன்று சர்வதேச சந்தையில் சற்று சரிந்துள்ளது. அவுன்ஸூக்கு 1.80 டாலர் குறைந்து, 1,888 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமையன்று 1890 டாலராக முடிவடைந்த தங்கம் விலையானது தற்போது 1,888 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச வெள்ளி விலை
சர்வதேச சந்தையிலும் வெள்ளியின் விலையானது, ஆறு நாள் ஏற்றத்திற்கு பின்பு 0.81% வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. தற்போது 0.178 டாலர் குறைந்து 22.810 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இன்று தற்போது சற்று வெள்ளியின் விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏன் இந்த தீடிர் சரிவு?
கடந்த சில நாட்களாக தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், இன்று சற்று சரிந்துள்ளது. இது புராபிட் புக்கிங்க் காரணமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த சரிவானது எவ்வளவு இருந்தாலும், இது நிரந்தரமான விலை குறைப்பு அல்ல, ஏனெனில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.