சீனாவின் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இதுவரை 2,600 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாகவும், மேலும் 77,658 பேர் இந்த கொடிய வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமையன்று சீனாவின் முக்கிய நகரத்தில் 409 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கியுள்ளதாக கூறிய நிலையில், இன்று 508 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களாகவே சீனாவுக்கு வெளியிலேயும் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இது மேலும் மக்கள் மத்தியில் பயத்தினை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் விலை
சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது, திங்கட்கிழமையன்று சற்று சரிவில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று அவுன்ஸூக்கு 18.95 டாலர்கள் குறைந்து, 1,657.55 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகிறது. கிட்டதட்ட நேற்றைய முடிவு விலையில் இருந்து 1.15% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கமாடிட்டி வர்த்தகத்தில் வீழ்ச்சி
சீனாவுக்கு வெளியிலேயும் தற்போது இந்த கொரோனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தினை தொடர்ந்து தொட்டு வருகிறது. இதன் எதிரொலியாக இந்திய ப்யூச்சர் வர்த்தகத்திலும் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்திலும் புதிய உச்சத்தினை நேற்று தொட்டது. இந்த நிலையில் இன்று இதுவரை 1.50% வீழ்ச்சி கண்டு, குறிப்பாக சொல்லவேண்டுமானால் 642 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 42,938 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
வெள்ளி விலை வீழ்ச்சி
இது இப்படி எனில் மறுபுறம் வெள்ளியின் விலையும் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் அதிகரித்து வந்தது. இது தங்கத்தின் விலைக்கு ஏற்ப குறையவில்லை என்றாலும் இன்று சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் தற்போது 1.61% வீழ்ச்சி கண்டு 18.573 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 955 ரூபாய் குறைந்து 48,450 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம்
சீனாவுக்கு வெளியே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், உலகப் பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பின் புகலிடமான தங்கத்தில் தங்களது முதலீடுகளை செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியது. ஆக இனியும் கொரோனாவில் தாக்கம் அதிகரித்தால் நிச்சயம் அது தங்கத்திற்கு ஆதரவை வழங்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலீடுகள் அதிகரிக்கும்
எவ்வாறாயினும் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக சீனா மேற்கொண்ட கொள்கை தளர்த்தல் நடவடிக்கைகள், பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதே சில ஆய்வாளர்கள் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது கொரோனாவில் தாக்கத்தில் இருந்து பொருளாதாரத்தினை தற்காத்து கொள்ள நிச்சயம் வட்டி குறைப்பை செய்யலாம். இது தங்கம் போன்ற முதலீடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஆபரண தங்கத்திற்கான தேவையை குறைக்கலாம்
எப்படி இருப்பினும் அதிகளவிலான தங்க விலைகள் பிசிகல் தங்கத்தின் தேவையினை தாக்கலாம், இதனால் தங்கத்திற்கான தேவை குறையலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் தற்போது தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தனது ஆதிக்கத்தினை தொடங்கியுள்ளது கொரோனா. இதனால் வரும் காலத்தில் இந்த தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தங்கம் விலையில் இது எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
‘சவரன் விலை எவ்வளவு?
சர்வதேச சந்தையில் விலை குறைந்திருந்தாலும் ஆபரண தங்கத்தின் விலையில் அவ்வளவாக எதிரொலிக்கவில்லை என்றே கூறலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சவரனுக்கு (22 கேரட்) 8 ரூபாய் அதிகரித்து 32,808 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 10 கிராம் தங்கத்தின் விலையானது 41,010 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.