இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் தங்கம் என்பது கஷ்டங்கள் வந்தால் தீர்க்கும் ஒரு நல்ல ஆசானாகத் தான் உள்ளது. ஏனெனில் அவசர தேவைக்கு வங்கிகளில் வைத்து பணம் வாங்கிக் கொள்வதும், பின்னர் நம் வசதிக்கேற்ப திரும்ப பெற்றுக் கொள்வதும் நடந்து கொண்டு தான் உள்ளது.
ஒரு புறம் தங்கத்தின் மீது உள்ள மோகமும், மறுபுறம் தேவைக்கு ஏற்ப உடனடியான இதனை வைத்து பணம் பெற முடியும் என்பதே நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் தற்போது கொரோனாவின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த நிலையில் கூட, ஆன்லைனில் தங்கம் விற்பனையானது களைகட்டியது.
புதிய உச்சம்
இப்படி பலரின் வாழ்வில் ஒன்றி இருக்கும் தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 49,348 ரூபாய் என்ற புதிய உச்சத்தினை தொட்டது. இப்படி தொடர்ந்து ஏறுமுகமாகவே சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலையானது குறையவே குறையாதா? என்ற உணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை குறைய காரணம் என்ன?
தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று தங்கம் விலையானது சற்று குறையத் தொடங்கியுள்ளது. இப்படி பலமான ஏற்றத்திற்கு பின்பு சரிந்துள்ளதே என்ன காரணம்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு. அமெரிக்கா டாலரின் மதிப்பானது சற்று வலுவடைந்துள்ள நிலையில், அது பங்கு சந்தைகள் ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற உணர்வே தங்கத்தில் முதலீடு செய்வதை தள்ளி வைத்தது. இதுவும் விலை சரிய ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இந்த வீழ்ச்சி நிலையல்ல
அதோடு தங்கம் புதிய உச்சத்தினை தொட்ட நிலையில் புராபிட் புக்கிங் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கம் விலையானது சற்று குறைய ஆரம்பித்துள்ளதாக நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது. எனினும் இது நீண்டகாலத்திற்கு இந்த சரிவு இருக்காது. ஏனெனில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், மற்றும் மீண்டும் சற்று ஆரம்பித்துள்ள அமெரிக்கா சீனா 2வது கட்ட ஒப்பந்த பிரச்சனையானது, தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம். ஆக இந்த இறக்கம் தற்காலிகமானது தான் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
ஆக பல நாடுகளில் நிலவி வரும் நிலையற்ற அரசியல் பிரச்சனை, தங்கத்திற்காக வலுவாக தேவை என இப்படி பல காரணங்கள் தங்கம் விலை அதிகரிக்கவே சாதகமாக அமைந்துள்ளது. ஆக இன்று தங்கம் விலையானது சற்று குறைந்தாலும், இனி தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு
ஒரு வேளை கொரோனாவிற்கான தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சந்தையில் மாற்றம் இருக்கலாம். ஏனெனில் இன்றைய நிலவரப்படி சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது 13,229,695 பேராக அதிகரித்துள்ளது. இதுவே பலி எண்ணிக்கையானது 5,74,981 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் இந்த எண்ணிக்கையானது கூடிக் கொண்டே போகிறதே தவிர குறைந்தபாடாக இல்லை.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
ஆக இப்படி பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் தான் கடந்த வாரத்தில் உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது. தற்போதைய நிலவரப்படி (10.10 மணியளவில்) அவுன்ஸூக்கு 14.20 டாலர்கள் குறைந்து 1,799.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.76% சதவீத வீழ்ச்சியாகும்.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைபோலவே வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 1.67% வீழ்ச்சி கண்டுள்ளது. வெள்ளி விலையானது 0.340 டாலர் குறைந்து 19.448 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையினை கொரோனா வைரஸ்கள் ஆதரித்தாலும், வெள்ளியின் தேவைக்கு இது பாதகமாகவே அமையும். ஏனெனில் தொழில்சாலைகளில் வெள்ளியின் பயன்பாட்டினை குறைக்கும். இதன் காரணமாக வெள்ளியின் விலையானது தங்கத்தின் விலையினை விட சற்று பலமாகவே வீழ்ச்சி கண்டுள்ளது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச தங்கம் விலையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தொடக்கத்திலேயே தங்கம் விலையானது வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 238 ரூபாய் குறைந்து, 48,910 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 0.45 சதவீத வீழ்ச்சியாகும்.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலையானது இன்று சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 686 ரூபாய் குறைந்து, 52,359 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 1.22 சதவீத வீழ்ச்சியாகும்.