இன்று நெருக்கடியான நிலையிலும், நல்ல வருமானம் கொடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு முதலீடு தங்கம் தான்.
பங்கு சந்தை தொடங்கி, பத்திர சந்தை வரை அனைத்தும் சரிவின் பிடியில் இருக்கும் இந்த நேரத்தில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கத்தினை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தினை கண்டுள்ள நிலையில், மீண்டும் இனி வரும் மாதங்களில் தங்கம் விலையானது உச்சம் தொடலாம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
ஃபெடரல் வங்கியின் நடவடிக்கை
இன்று உலகளவில் கொரோனாவின் பிடியில் பல நாடுகள் சிக்கி சீரழிந்து வருகின்றன. எனினும் அமெரிக்கா, அதனை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் தான் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது, பொருளாதார முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு, வட்டி விகிதத்தினை பூஜ்ஜியத்துக்கும் அருகில் 2023ம் ஆண்டு வரை வைத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திர லாபம் குறையுமே
அமெரிக்கா மத்திய வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையால், பத்திர சந்தைகள் சரிவினை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக வருமானம் தரக்கூடிய, முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் நகரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலையில், தங்கம் ஒன்றே பாதுகாப்பு என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. ஆக அமெரிக்காவின் இந்த அதிரடியான நடவடிக்கை தங்கத்திற்கு ஆதரவாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
டாலர் பலவீனம்
அதோடு தற்போதைக்கு பொருளாதாரம் மீண்டு வர பெரிய அளவிலான ஊக்கத் தொகைகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் டாலரின் மதிப்பு அழுத்தத்தில் தான் உள்ளது. அதிலும் வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கும் அருகில் இருப்பதால் பத்திர லாபங்களும் குறையலாம் என்பதால், டாலரின் மதிப்பும் பலவீனமாகவே இருந்து வருகிறது.
வேலையின்மை க்ளைம்
மேலும் விரைவில் வேலையின்மை ஊழியர்களுக்கான க்ளைம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலரை மேலும் அழுத்ததிற்கு தள்ளலாம். இது மஞ்சள் உலோகத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக பொருளாதார மீட்பு கவலைகளும் அதிகரித்து வருகின்றன.
ஐரோப்பிய & ஜப்பான் மத்திய வங்கிகள் ஊக்கத்தொகை
கொரோனா வைரஸ் காரணமாக நெருக்கடியான நிலையில் உள்ள பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்த, ஊக்கத்தொகையினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. விலைமதிப்பற்ற உலோகங்கள் விலையை அதிகரிக்க இதுவும் ஆதரவாக அமைந்துள்ளன. ஆக இப்படி எது எடுத்தாலும் தங்கத்திற்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், பல நிபுணர்களும் தங்கம் விலையை அதிகரிக்கலாம் என்றே கூறி வருகின்றனர்.
தற்போதைய விலை நிலவரம்
செப்டம்பர் 18 அன்று, ஸ்பாட் மார்கெட்டில் தங்கம் விலையானது டாலர் பலவீனத்தால் தற்போது 51,620 ரூபாயாக இருந்தது. அன்று ப்யூச்சர் வர்த்தகத்திலும் 10 கிராம் தங்கத்தின் விலையானது 0.51% அதிகரித்து அல்லது 262 ரூபாய் அதிகரித்து. 51,715 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் தங்கம் விலையில் சிறிய சரிவு இருக்கலாம். அது ரூ.50,000 ஆக கூட இருக்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ். இந்த நேரத்தில் தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
அடுத்த டார்கெட்
மேலும் தங்கம் விலையானது அடுத்த 2 - 3 மாதங்களில் 56,000 ரூபாயினை தொடலாம். தற்போது டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்புகள் அதிகரித்துள்ளதால் 10 கிராம் தங்கம் விலையானது மேலும் தற்போதைக்கு அதிகம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இது 50,000 ரூபாய் வரையில் கூட குறையக்கூடும். ஆனால் இது முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கும். இங்கு தங்கத்தினை வாங்கி வைக்கலாம். இது அடுத்த மூன்று மாதங்களுக்குள் 56,000 ரூபாய் என்ற இலக்கினை தொடலாம் என்றும் மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் இணை நிறுவனர் கணித்துள்ளார்.
தங்கம் விலை இன்னும் சில ஆண்டுகளுக்கு அதிகரிக்கும்
இதே அமெரிக்காவின் முதலீட்டு ஜாம்பவானான ஜிம் ராஜெர்ஸ், தங்கம் மற்றும் வெள்ளி விலையானது இன்னும் அடுத்த சில ஆண்டுகளுக்கு அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் தானும் அதில் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே முதலீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி பல சர்வதேச நிறுவனங்களும் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றன
தடுப்பூசி எப்போது செயல்பாட்டுக்கு வரும்.
இதுமட்டும் அல்ல தங்கத்தினை உயர்த்த இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளன. எனினும் முக்கியமாக பார்க்கப்படுவது கொரோனாவிற்கான தடுப்பூசியோ? ஆனால் இன்று வரையிலும் எந்தவொரு தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்ததாக தெரியவில்லை. அதோடு இந்த தடுப்பூசியான நடைமுறைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் பதற்றங்கள்
அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று வரையிலும் சமாதானம் ஏற்பட்டதாக தெரியவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் தற்போது சீனா செயலிகளுக்கு தடை விதிகப் போவதாக கூறி வருவது, சீனா மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
3000 டாலரை தொடாமல் விடாது போல?
இதே இந்தியாவில் சீனா இந்தியா எல்லை பிரச்சனையானது, இன்று வரையில் சமாதானம் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆக இப்படியாக ஒவ்வொன்று மஞ்சள் உலோகத்திற்கு சாதகமாகவே இருந்து வருகின்றன.
பேங்க ஆஃப் அமெரிக்கா சொல்வதனை போல் போகிற போக்கில் தங்கம் விலையானது, 3,000 மட்டும் அல்ல, 5,000 டாலரினையும் தொட்டு விடும் போல் இருக்கிறது.
அடுத்த சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்
இதுவே ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் அறிக்கையில், ஃபெடரல் வங்கி வங்கி விகிதத்தினை அப்படியே வைத்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் பொருளாதாரம் கொரோனாவின் காரணமாக தள்ளாடி வருகின்றது. அதோடு அமெரிக்காவின் தேர்தலும் நெருங்கி வரும் இந்த நேரத்தில், அதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கிறது. ஆக 10 கிராம் தங்கத்தின் விலையானது 50,500 ரூபாய் என்ற லெவலை தொடலாம். ஆக இந்த இடத்தில் முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கலாம். இது 55,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.