டெல்லி: உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனாவினால் மக்கள் துவண்டு போய் உள்ளனர் எனலாம். இதன் தாக்கம் பொருளாதாரத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலி சர்வதேச சந்தைகள் அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், வீழ்ச்சியையே அதிகம் கண்டு வருகிறது.
இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு வருகிறது.
சற்று நிவாரணம் அளிக்கலாம்
நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், சில இடங்களில் லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளது. அதோடு, சிறு தொழில்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில், சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் துவண்டு போன பொருளாதாரத்திற்கு சற்று நிவாரணம் அளிக்கப்படலாம் என்ற எண்ணம் நிலவி வருகிறது.
தொழில்துறைக்கு தளர்வு
அதோடு தொழில்துறையினர் கொரோனாவினால் பாதிக்கப்படுவது சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போதைய தளர்வினால் அலுவலகங்கள் மற்றும் சந்தைகள் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்துள்ளன. இதனால் ஓரளவிற்கு பொருளாதாரத்தினை செயல்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவில் இதுவரை கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் இதுவரையில் 46,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,583 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவின் பாதிப்பு
உலகம் முழுக்க கொரோனாவினால் 37.24.518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே உலகம் முழுக்க 2,58,027 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் உலகம் முழுக்க கொரோனாவினால் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை (9.30 மணியளவில்) சற்று சரிவுடன் தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 1,711 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், எம்சிஎக்ஸ் சந்தையிலும் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 49 ரூபாய் அதிகரித்து, 45,805 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது இன்றும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக இன்று கிட்டதட்ட 1% ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. தற்போது விலை 15.255 டாலராக வர்த்தகமாகி வருகிறது. பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தற்போது 283 ரூபாய் அதிகரித்து, 42,180 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 தினங்களாகவே ஒரு நாள் ஏற்றம் கண்டாலும், அடுத்த நாள் சரிவினை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் சராசரியாக பார்க்கும் போது வெள்ளியின் விலையானது பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றே கூறலாம்.
ஆபரண தங்கம் விலை
கடந்த மே 2ம் தேதியிலிருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் ஆபரண தங்கத்தின் விலையானது, இன்றும் சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்தே காணப்படுகிறது. சென்னையின் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது (22 கேரட்) கிராமுக்கு 4,391 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,128 ரூபாயாகவும் அதிகரித்தும் காணப்படுகிறது. இதே வெள்ளியின் விலையானது கிராமுக்கு 41.31 ரூபாயாகவும் காணப்படுகிறது.