மக்களுக்கு அன்றாட தேவைகள் என்று பல இருந்தாலும், தங்கத்தின் மீது நம் மக்கள் காட்டும் அதீத ஆர்வம் என்றும் குறையாது என்றே கூறலாம்.
இந்தியாவில் குறிப்பாக தமிழக்கத்தில் குழந்தை காதுகுத்து தொடங்கி கல்யாணம், சீர் சடங்கு வரை தங்கம் இல்லாமல் இருக்காது. அப்படி ஒரு விழாவினை நாம் காண்பது மிக அரிது என்றே கூறலாம்.
ஏன் கடனை உடனை வாங்கியாவது குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கத்தினையாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு மிக அதிகம். அந்தளவுக்கு நம் மக்களுக்கு தங்கத்தின் மீது மோகம் அதிகம்.
கனவு நிறைவேறுமா?
மாத மாதம் வரும் சம்பளத்தில் கணவருக்கு தெரியாமல் மிச்சப்படுத்தி எப்படியேனும், தங்களது குழந்தைகளுக்கு கொஞ்சமேனும் தங்கம் வாங்கிவிட வேண்டும் என்னும் தாய்மார்கள் இங்கு மிக அதிகம். அந்தளவுக்கு நம் மக்களுக்கு தங்கத்தின் மீது தீரா மோகம் என்றே கூறலாம். ஆனால் இவர்களின் கனவுகளுக்கெல்லாம் நினைவாகுமா? என்ற கேள்விக்குறிதான் எழுகிறது. அந்தளவுக்கு தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
அதிகரித்து வரும் தாக்கம்
தங்கத்தின் விலைக்கு ஆதரவளிக்கும் விதமாக நாளுக்கு நாள் சீனாவின் புதிய வெளியீடான கொரோனாவால் இன்று வரை 2,236 பேருக்கு மேல் இறந்துள்ளனர். மேலும் 75,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சீனாவில் பொருளாதாரம் நிலை குலைந்து போயுள்ளது. சீனா வர்த்தகமும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதன் தாக்கம் அண்டை நாடுகள் மட்டும் அல்லாது உலகப் பொருளாதாரத்திலும் கைவைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பான முதலீடு
இதனால் சர்வதேச சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதற்கு மத்தியில் முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது என்றே கூறலாம். இதனால் தொடர்ந்து தங்கத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தங்கம் மட்டும் அல்லாது தங்கம் குறித்தான அனைத்து இடிஎஃப் குறியீடுகளும் தொடர்ந்து பச்சை நிறத்திலேயே உள்ளன.
சர்வதேச சந்தையில் விலை
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் இன்று மட்டும் இதுவரை அவுன்ஸூக்கு 15.65 டாலர்கள் அதிகரித்து 1636.25 டாலர்களாக அதிகரித்து வருகிறது. இன்று அதிகபட்சமாக 1639.25 டாலர் வரை சென்று, பின் தற்போது இந்த விலையில் வர்த்தகமாகி வருகிறது. அதிலும் கடந்த நான்கு தினங்களில் மட்டும் சுமார் அவுன்ஸூக்கு 59 டாலர் அதிகரித்துள்ளது.
இந்திய சந்தையில் விலை
இதே சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும், தற்போது 484 ரூபாய் அதிகரித்து 42,070 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது வரலாறு காணாத உச்சம் என கூறப்படுகிறது. இன்று இதுவரை கண்ட உச்ச விலை 42,158 ரூபாயாகும். இந்த கமாடிட்டி வர்த்தகத்திலும் தொடர்ந்து மூன்று தினங்களாக ஏற்றம் கண்டு வருகிறது.
வெள்ளி விலை
இதே போல் வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை அதிகரித்து வரும் அதே நேரம் வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் வெள்ளியின் முக்கிய நுகர்வோரான சீனாவில் தொடர்ந்து நுகர்வு குறைந்து வரும் இந்த நிலையிலும் வெள்ளியின் விலை அதிகரித்து வருவது குறி[ப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 351 ரூபாய் அதிகரித்து, தற்போது 47,898 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே போல் டாலரில் வெள்ளியின் விலை 0.86% ஏற்றம் கண்டு 18.488 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
ஆபரண தங்கம்
இதே போல் ஆபரண தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,981 ரூபாய்க்கும், இதே சவரனுக்கு 31.848 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. கிட்டதட்ட 32,000 ரூபாயை நெருங்கும் நிலையில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதற்கே சீனவின் கொரோனாவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
கொரோனாவின் தாக்கம்
இப்படி அதிரடியாக அதிகரித்து வரும் தங்கம் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதற்கு முக்கிய காரணம், சீனாவால் கட்டுப்படுத்த முடியாமல் தினறி வரும் கொரோனா என்றும் கூறப்படுகிறது. அதிலும் நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வது சர்வதேச முதலீட்டாளர்கள் இடையே ஒரு பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
கனவு பலிக்குமா?
அதிலும் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து இது வரை 7% அதிகரித்துள்ளதாக கூறப்படும் தங்கம் விலை, இன்னும் அதிகரிக்குமோ என்ற பீதியை மக்கள் இடையே பரப்பியுள்ளது. இதற்கு மற்றொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. அது அமெரிக்காவின் பத்திர லாபம் விகிதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக இதன் காரணமாக டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையலாம் என்ற எண்ணமும் எழுந்துள்ள காரணத்தினாலும் விலை இப்படி தாறுமாறாக அதிகரித்து வருகிறது. எது எப்படியோங்க இப்படியே போன தங்கம் வாங்குவது சாமானிய மக்களுக்கு அது கனவாவே போயிடும் போல இருக்கு.