நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் பிரியர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியை கொடுத்து வருகிறது தங்கம் விலை. ஏனெனில் தொடர்ந்து தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமான நடப்பு ஆண்டில் இதுவரை மட்டும் சுமார் 23 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே கடந்த ஆண்டில் வெறும் 25 சதவீதம் மட்டும் ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு தங்கம் விலையானது நடப்பு நிதியாண்டில் கிடு கிடுவென்று தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
ரூபாயின் மதிப்பு சரிவு
சரி என்ன தான் காரணம் இந்த விலையேற்றத்திற்கு? டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 76.19 ரூபாயாக சரிந்தது. இது நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து சற்று சரிவினைக் கண்டு வருவது குறிப்பிடப்தக்கது. கடந்த சில வாரங்களாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 75 - 76 ரூபாய்க்குள்லேயே உள்ளது. குறிப்பாக நடப்பு ஆண்டில் இதுவரை 7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் விலை
நடப்பு ஆண்டில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 15% ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொருளாதார மந்த நிலை மற்றும் பல சர்வதேச காரணிகளால் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக சர்வதேச தேசமும் கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்தது எனலாம்.
பாதுக்காப்பு புகலிடம்
இதன் காரணமாக சர்வதேச சந்தைகள் தொடர்ந்து சரிவினை சந்தித்து வந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பினைக் காரணம் காட்டி, முதலீட்டினை தங்கத்தில் செய்து வந்தனர். இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய வங்கிகளின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்தன.
இதுவும் தங்கம் விலை உயர்விற்கு காரணம்
மேலும் பண வீக்கம் குறித்தான அச்சமும் நிலவி வருகிறது. இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், ஆனந்த் ரதி ஷேர்ஸ் மற்றும் ஸ்டாக் புரோக்கர்களின் ஆய்வாளர் ஜிகர் திரிவேதி, கொரோனா தொற்றுகள் மற்றும் அமெரிக்கா சீனா பதற்றங்கள் ஆகியவற்றின் இரண்டாவது கட்ட அலை குறித்த எச்சரிக்கை பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையினை உயர்த்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
சரிந்து வரும் நாணய வீழ்ச்சி
இதே உலகளாவிய நிதி நிறுவனமான கோல்டுமேன் சாச்சஸ், தங்கம் பற்றிய கணிப்பினை உயர்த்தியுள்ளது. இது சரிந்து வரும் நாணய மதிப்புகள் மற்றும் நிச்சயமற்ற பொருளாதார காரணி போன்ற காரணங்களால் விலை அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை கணிப்பு
இதோடு கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் அடுத்த மூன்று மற்றும் ஆறு மாதங்களில், 12 மாதங்களில் தங்கம் விலையானது எவ்வளவு உயரும் என்ற கணிப்பை காட்டியது. அதில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு $1800, $1900 மற்றும் 2000 டாலர்கள் வரை அதிகரிக்கலாம் என்று அதிகரித்துள்ளது. இது முன்னர் 1600, 1650 மற்றும் 1800 டாலர் வரை கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விலையில் வரியும் அடங்கும்
இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் தேவையானது குறைந்து இருந்தாலும், விலையானது குறையவில்லை எனலாம். ஒரு புறம் தங்க ஆபரணங்களின் விலையில் 13 சதவீதம் வரை தள்ளுபடி அளிப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது கடந்த வாரத்தின் 20 டாலர்களாக இருந்தது. எனினும் உள்நாட்டு விலையில் 12.5%மும், ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் அடங்கும். ஆக விற்பனையாளர்கள் தள்ளுபடியே அளித்தாலும், விலை அவ்வளவாக குறையவில்லை.
விலை அதிகரிக்கலாம்
கடந்த வாரம் அமெரிக்கா பொருளாதார மீள்ச்சிக்கு அதிக நிதியும் மற்றும் வட்டி விகித உதவியும் அதிகம் தேவைப்படும் என்றும் போஸ்டன் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் எரிக் ரீசங்கிரென் தெரிவித்தார். இதுவும் தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட காரணமாக அமைந்தது. அதோடு ஐரோப்பிய பொருளாதாரமும் வியத்தகு வீழ்ச்சியில் இருப்பதாகவும் கருத்துகள் நிலவி வருகின்றன. ஆக இப்படியாக பரவலான பல காரணங்கள் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்தது.
மேலும் தங்கம் விலையானது மேற்கொண்டு சிறுசிறுக ஏற்றம் காணலாம் என்கிறார்கள் நிபுணர்கள். சாமனியர்கள் இனி தங்கம் பற்றி நினைக்க முடியுமா என்று தான் தெரியவில்லை.