என்னதான் சீனா சமாதானம் சொன்னாலும் தங்கத்தின் விலையானது குறைவதாக தெரியவில்லை. ஏனெனில் இரண்டு நாள் சரிவுக்கு பிறகு. தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
சீனாவின் வுகான் மாநகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கம், இன்று உலக முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது.
உலக முழுக்க இந்த வைரஸ் தாக்கம் இருந்தாலும், சீனாவில் இந்த தாக்கத்தினால் சுமார் 500 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு 24,000 பேருக்கு இந்த வைரஸின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஊக்குவிப்பு நடவடிக்கை
கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருவதை தடுக்க, அந்த நாட்டு அரசு முதலீடுகளை ஊக்குவிப்பதாக அறிவித்திருந்தது. மேலும் இதற்காக சீனா பல நாணய கொள்கைகளை அறிவிக்க உள்ளதாகவும் கூறியது. குறிப்பாக சீனாவின் மத்திய வங்கி பொருளாதாரம் சரியாமல் இருக்க தங்களவு ஆதரவினை தெரிவிக்கும் வகையில் 1.2 டிரில்லியன் யுவான் மதிப்புள்ள நிதியை சந்தைகளில் செலுத்துவதாகவும் தெரிவித்தது.
தாக்கம் அதிகரிப்பு
இதனால் சீனாவின் பொருளாதாரம் மேற்கொண்டு சரிவடைவதை தடுக்க முடியும் என்று சீனா அரசு நம்பியது. ஆனால் சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் போகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே போகின்றன.
தங்கத்தில் முதலீடு
இந்த நிலையில் சீனாவின் மீது நம்பிக்கையை இழந்த முதலீட்டாளர்கள், நிச்சயம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் பொருளாதார தாக்கம் இருக்கும் என்றும் நம்புகிறார்கள். மேலும் இது உலகப்பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என்ற எண்ணத்தில் பாதுக்காப்பாக தங்களின் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளனர்.
பொருளாதாரம் வீழ்ச்சி காணும்
என்ன தான் சீனா அரசு சமாதானம் சொன்னாலும், மறுபுறம் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று நிபுணர் கணித்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. மேலும் தற்போது பரவலாக உலக நாடுகள் முழுவதும் விரைவாக இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பு அஸ்திரம்
விலை உயர்ந்த ஆபரணம் மற்றும் உலோக பயன்பாட்டாளரான சீனாவின் நுகர்வும் தற்போது குறைந்திருந்தாலும், உலகம் முழுவதிலும் உள்ள முதலீட்டாளர்கள் பார்வை தற்போது பாதுகாப்பு அஸ்திரமாக கருதப்படும் தங்கத்தின் மீது விழுந்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இரண்டு நாள் வீழ்ச்சிக்கு பிறகு. தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
சர்வதேச சந்தையில் விலை
சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் மனதில் கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் பதிந்துள்ளதாகவே கருதலாம். இதனால் இரண்டு நாள் வீழ்ச்சிக்கு பிறகு தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி (10.46 மணியளவில்) 6.95 டாலர் அதிகரித்து, அவுன்ஸூக்கு 1,562.35 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
இந்திய சந்தையில் விலை
இதுவே இந்திய சந்தைகளில் 10 கிராம் தங்கத்தின் விலையானது, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 1,200 ரூபாய் வீழ்ச்சி கண்டது. சொல்லப்போனால் நேற்றைய முடிவு விலையானது 39,975 ரூபாயாக முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 225 ரூபாய் அதிகரித்து 40,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
சென்னையில் ஆபரண விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது பெரிய அளவில் மாற்றம் ஏதும் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையானது (22 கேரட்) 3,878 ரூபாயாகவும், இதே சவரனுக்கு எட்டு ரூபாய் அதிகரித்து 31,024 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு தினங்களில் சவரனுக்கு 368 ரூபாய் சரிந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போல வெள்ளியின் விலையும், இரண்டு நாள் சரிவுக்கு பிறகு இன்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இன்று தற்போது வரை 0.38% அதிகரித்து 17.628 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதே போல் இந்திய சந்தையிலும் கிலோவுக்கு 262 ரூபாய் அதிகரித்து 46,341 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.