புன்னகையை கொடுக்கும் பொன்னகையின் விலையானது, நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகின்றன. இந்த பொன்னகையினால் மக்கள் புன்னகையையே மறந்து விடும் அளவுக்கு விலை ஏற்றம் கண்டு வருகிறது.
அதிலும் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றங்கள், சர்வதேச சந்தையில் விலையை அதிகரிக்கும், சாதகமான காரணிகளில் ஒன்றாக அமைகின்றது.
உலகளாவிய விகிதங்கங்கள் அதிகரிக்கும் போது அதை எதிரொலிக்கும் விதமாக இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையிலும் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
தங்கம் விலை அதிகரிப்பு
இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் (எம்சிஎக்ஸ்) சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இங்கு தங்கம் விலையானது கிடுகிடு வென்று ஏறிக் கொண்டிருக்கிறது. அதுவும் இரண்டு ஆயிரம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான் 10 கிராம் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு வாரத்தில் 2,000 ரூபாய் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ப்யூச்சர் தங்கத்தின் விலையானது 2 சதவிகிதம், அதாவது 850 ரூபாய் அதிகரித்து 40,130 ரூபாயாக வர்த்தகமாகியது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போன்று ப்யூச்சர் வெள்ளியின் விலையானது 1 சதவிகிதம் அதிகரித்து 47,520 ரூபாயாக அதிகரித்துள்ளது. தங்கத்தினை போலவே வெள்ளியின் விலை அதிகரிப்பால் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியால் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையின் நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது, கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும், அவுன்ஸூக்கு 27 டாலர்கள் அதிகரித்து 1555.15 டாலராக வர்த்தகமாகியுள்ளது. கிட்டதட்ட கடந்த வெள்ளிக்கிழமை மட்டும், லோவிலிருந்து 36 டாலர் அதிகரித்துள்ளது. இதே கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டதட்ட 100 டாலர்கள் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றத்திற்கு என்ன காரணம்?
கடந்த வாரத்தில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் காரணமாக ஈரானின் மிக சக்தி வாய்ந்த தளபதிகளில் ஒருவரைக் கொன்றது. மத்திய கிழக்கில் பதட்டங்களைத் தூண்டியது மற்றும் பாதுகாப்பான சொத்துக்களைக் கோருவதன் பின்னர் தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்ததுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு
தங்கத்தின் விலை புவிசார் அரசியல் பதற்றங்களால் ஆதரிக்கப்பட வாய்ப்புண்டு என்று அபான்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் அபிஷேக் பன்சால் கூறுகிறார். பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக ஜனவரி 6 முதல் சீனா ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் தொடர்ந்து தங்கமும் ஆதரவைக் கண்டறிந்துள்ளது. மேலும் இது 800 பில்லியன் யுவான் நிதியை வெளியிடும் என்று அவர் கூறியுள்ளார்.
பணபுழக்கம் அதிகரிக்கும்
எளிதாக்கும் நாணயக் கொள்கை சீனா சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் மற்றும் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும். இந்திய ரூபாயின் பலவீனத்தைத் தொடர்ந்து உள்நாட்டு தங்கத்தின் விலையாந்து மேலும் உயரக்கூடும் என்றும் பன்சால் கூறியுள்ளார்.
இறக்குமதி வீழ்ச்சி
2019ம் ஆண்டில் இருந்ததை விட தங்கத்தின் விலையானது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. விலைவாசி உயர்வால் தேவை அதிகரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா அதன் அனைத்து தங்க தேவைகளையும் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.
விலை அதிகரிப்பு
தங்கத்தின் விலையானது கடந்த ஆண்டு இந்தியாவில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 2019ம் ஆண்டில் 831 டன்கள் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இதே ஒரு வருடத்திற்கு முன்பு 944 டன்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அரசானது தங்கம் இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டும் இறக்குமதி குறையலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் இதற்கு மாறாக தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை எப்படி?
சென்னையில் இன்று (22 கேரட்) ஒரு கிராம் தங்கத்தின் விலையானது 3,832 ரூபாயாகவும், இதே சவரன் ஆபரண தங்கத்தின் விலையானது 30,656 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. அதிலும் இன்று மட்டும் ஒரு சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.