மும்பை: தங்கம் எப்போதுமே பாதுகாப்பு புகலிடமாக இருப்பதால், முதலீட்டாளர்களின் போர்ட்போலியோவில் எப்போதும் அதற்கு முக்கிய இடமுண்டு.
இதற்கிடையில் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டில் 10 கிராம் தங்கமானது 63,000 ரூபாயினை தொடலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதெல்லாம் சரி? என்ன காரணத்தினால் இந்த விலையை தொடும்? வாருங்கள் பார்க்கலாம்.
என்ன காரணம்
புதிய ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்புகள், அமெரிக்கா டாலரின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். இதன் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டிலேயே கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
பாதுகாப்பு புகலிடமான தங்கம்
கொரோனாவின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் காலாண்டில் வீழ்ச்சி கண்டது. இந்தியா மட்டும் அல்ல உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் கொண்டு, பல நாடுகளும் மிக மோசமான பின்னடைவை சந்தித்தன. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராமுக்கு 56,191 ரூபாயினையும், இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2075 டாலர்களையும் தொட்டது.
தங்கத்திற்கு ஆதரவாக குறைவான வட்டி
கொரோனாவினால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, சர்வதேச மத்திய வங்கிகள், பணப்புழக்கத்தினை அதிகரிப்பதற்காக வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்திருக்கலாம். இதன் காரணமாக முக்கிய முதலீடுகள் குறையும். இந்த முதலீடுகள் தங்கம் மற்றும் பிற முதலீடுகளில் செய்யப்படலாம். ஆக இது தங்கம் விலையை ஊக்குவிப்பதாக அமையும்.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு சாதகமாக பல காரணிகள் வலுவாக உள்ளன. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க கூடும். அதோடு தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனாவால், புதிய ஊக்கத் தொகை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரிக்கலாம். ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்ககூடும்.
தங்கத்திற்கு சாதகமாகலாம்
தற்போது அமெரிக்காவில் இரண்டாவது முறையாக பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இது உலகின் முதல் பொருளாதார நாடான அமெரிக்காவின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, இந்த அறிவிப்புகள் போதாது. ஏனெனில் பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, இன்றளவில் கொரோனாவினால் பெரும் இழப்பினை சந்தித்ததும், பாதித்ததும் அமெரிக்கா தான். ஆக அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய ஊக்கத் தொகை தேவைப்படும். ஆக இதுவும் 2021ல் தங்கம் விலைக்கு சாதகமான காரணிகளில் ஒன்றாக மாறக்கூடும்.
நிச்சயமற்ற அரசியல் சூழல்
தற்போது அமெரிக்காவில் ஜோ பிடன் தலைமையிலான கட்சி ஜெயித்திருந்தாலும், பலவீனமான பெரும்பான்மையாக உள்ளது. இதன் காரணமாக நிர்வாகங்களில் ஏதேனும் சீர்திருத்தங்களை கொண்டு வருவது தருவது கடினம். ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவளிக்கும். ஏனெனில் தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் டாலரும் உண்டு.
தேவை அதிகரிக்கும்
அதோடு உலகில் தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் டிராகன் தேசமான சீனாவிலும், இந்தியாவிலும் தேவை, 2021ல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு வலுவான ஆதரவினைக் கொடுக்கும். கடந்த சில ஆண்டுகளாவே வலுவான மறுமலர்ச்சியைக் காண முடிந்தது. ஆக 2021ம் ஆண்டில் ரூபாயின் மதிப்பு சற்று நிலையாக இருக்கும்பட்சத்தில், தங்கம் விலையானது குறைந்தபட்சம் எம்சிஎக்ஸ் சந்தையில் 60,000 ரூபாயினையும், சர்வதேச சந்தையில் 2200 டாலர்களையும் தொடலாம்.
தங்கம் விலை எதிர்பார்ப்பு
இதே ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் தங்கம் விலையானது அடுத்த ஆண்டில் நிச்சயம் அதிகரிக்கும். இது 2150 டாலர் மற்றும் 2390 டாலர்களை தொடும் என்றும் கணித்துள்ளது. இதே இந்திய சந்தையில் 57,000 ரூபாய் மற்றும் 63,000 ரூபாயினையும் தொடலாம் என்றும் கணித்துள்ளது.
உந்துதலாக இருக்கும்
மேலும் பொருளாதாரம் குறித்த நடவடிக்கைகள், தொழிலாளர் சந்தை வளர்ச்சி, ஊக்கத் தொகை அறிவிப்புகள் உள்ளிட்ட பல காரணிகள் தங்கத்திற்கு உந்துதலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் நிபுணர்கள் கூறியது போல தங்கம் விலையானது அடுத்த ஆண்டில் உச்சம் தொட பல வாய்ப்புகள் உள்ளது. ஆக விலை குறையும் போதும் வாங்கி வைக்கலாம்.