இன்று நாட்டில் கொரோனாவிற்கு மிக பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று தங்கம் விலை ஏற்றம் தான். ஏனெனில் அனுதினமும் புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது.
கொரோனா வழக்குகளை போலவே அனுதினமும் தங்கம் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் காரணமாக தங்கம் விலையானது கிடு கிடுவென தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
என்னதான் பணக்கஷ்டமாக இருந்தாலும், நம்மக்களின் முதல் முதலீட்டு ஆப்சன் என்பது தங்கமாகத் தான் இருக்கும். குறைந்தபட்சம் 1 கிராம் தங்கமேனும் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால் இதெல்லாம் கனவாகி விடும் போல் இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து 10 நாளாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
என்ன காரணம்?
சரி இப்படி தொடர்ச்சியாக தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றதே. என்ன காரணம். முதல் காரணமே பாதுகாப்பு புகலிடம் என்பது தான். உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இனி பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற பயத்தினாலேயே தங்களட்நு முதலீடுகளை தொடர்ந்து தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர்.
ஃபெடரல் வட்டி விகிதம் மாற்றமில்லை
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி ஏதும் நடக்கவில்லை. எனினும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க அனைத்து கருவிகளையும் பயன்படுத்த உறுதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் ஆதரிக்கப்பட்டது.
தங்கம் விலை கணிப்பு
கோல்டுமேன் சாச்ஸ் இதற்கு முன்பாக தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2000 டாலர்களை தொடும் என்று கூறியிருந்தது. ஆனால் இது தற்போது அவுன்ஸூக்கு 2,300 டாலர்களை தொடும் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இன்னும் பல நிபுணர்களும் தங்கம் விலையானது தொடர்ச்சியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக முந்தைய பல செய்திகளில் பார்த்தோம்.
அமெரிக்கா டாலரின் மதிப்பு
இந்த நிலையில் அமெரிக்கா டாலரின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது. அதுவும் இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் என இரு பிரிவினராக இது தூண்டுதல் தொகுப்பில் பிரிந்துள்ளனர். இது ஒப்பந்தத்திற்கு நெருக்கமாக இல்லை என்றும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெட்டோஸ் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
மேலும் குறைந்து வரும் வட்டி விகிதம், பணவீக்கம் என அனைத்தும் தங்கத்திற்கு எதிரான விஷயமாக பார்க்கப்படுகின்றது. (11 மணியளவில்) தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 1.75 டாலர்கள் குறைந்து, 1951.75 ஆக வர்த்தகமாகி வருகிறது. தொடர்ந்து 9 வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் சற்றே வீழ்ச்சி கண்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
இதே வெள்ளியின் விலையானது 0.96% வீழ்ச்சி கண்டுள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது நாளாக வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது. இது தற்போது 0.2446 டாலர்கள் குறைந்து 24.082 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகிறது. நிபுணர்கள் கூறியதை போல வெள்ளி விலையானது கடந்த சில தினங்களுகு முன்பு 25 டாலர்களை தாண்டி 26.275 டாலர்களாகவும் வர்த்தகமாகியுள்ள நிலையில், புராபிட் புக்கிங் காரணமாக விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது, இன்று 9 நாட்களுக்கு பின்பு சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 117 ரூபாய் குறைந்து, 53,070 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதுவும் புராபிட் புக்கிங்க் காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது தற்போது சரிந்து காணப்படுகிறது. கிலோ வெள்ளியின் விலையானது 1232 ரூபாய் குறைந்து, 64122 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது, இது கிட்டதட்ட 2 சதவீத சரிவாகும்.