தங்கம் என்றாலே இன்று பாதுக்காப்பு புகலிடமாக விளங்கும் ஒரு முதலீடு என்று தான் கருதப்படுகிறது. ஆனால் இதே இந்தியாவினை பொறுத்தவரையில் மிகச்சிறந்த ஆபரணமாக கருதப்படுகிறது.
பிறந்த குழந்தை முதல் திருமணம் என பல சடங்குகளில் முக்கிய அம்சமாக திகழும் தங்க நகைகள், ஒரு புறம் அணிகலனுக்காக வாங்கப்பட்டாலும், இன்றும் நடுத்தர குடும்பத்தினரின் உடனடி ஃபைனான்சியர் ஆக உள்ளது.
அந்தளவுக்கு நடுத்தர மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கத்தின் விலையானது, உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வட்டி குறைப்பு
இந்த நிலையில் மற்ற முதலீடுகள் வெகுவாக வீழ்ச்சி கண்டன. குறிப்பாக பங்கு சந்தைகள், பத்திர சந்தைகள் என அனைத்தும் பாதாளத்தினை நோக்கி சென்று கொண்டுள்ளன. இந்த நிலையில் அனைத்து முதலீட்டாளர்களின் பார்வையில் தென்பட்ட முக்கிய முதலீட்டு அம்சம் தங்கமாகத்தான் உள்ளது. ஆக இதனை தடுக்கவும் மற்ற சந்தைகளில் முதலீடுகளை அதிகரிக்கவும், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினை தடுக்கவும், கடந்த ஞாயிற்றுகிழமையன்று அமெரிக்க பெடரல் வங்கி வட்டி குறைப்பை செய்துள்ளது.
தங்கம் விலை
கடந்த வெள்ளிக்கிழமையன்று படு வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலையானது, மீண்டும் எந்தவொரு செய்திக்கும் செவிமடுக்காத நிலையில் இன்று சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்துள்ள நிலையில், தங்கம் விலையானது சராசரியாக 1,550 டாலர்கள் என்ற விகிதத்தில் சற்று நிலையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பல முதலீட்டாளார்கள் தங்கம் விலையில் அடுத்து என்ன நடக்கும் என்றும் கண்கானித்துக் கொண்டுள்ளனர்.
சர்வதேச சந்தையில் விலை நிலவரம்
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று நேர்மறையாகத் தான் உள்ளது. சொல்லப்போனால் தற்போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 25.90 டாலர்கள் அதிகரித்து காணப்படுகிறது. கிட்டத்தட்ட 2% ஏற்றம் கண்டே காணப்படுகிறது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் போக்கிலேயே காணப்படுகிறது. அமெரிக்காவின் வட்டி குறைப்பு இருந்தாலும், மற்ற நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் கருதி எந்த மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
கண்கானிப்பு
ஒரு புறம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பினால், அமெரிக்க பத்திரங்களில் மீண்டும் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாவற்றையும் விட டாலரின் மதிப்பும் சற்று வலுவடைந்து வருகிறது. இதனால் தங்கம் விலை பெரிய அளவில் ஏற்றம் காண வாய்ப்பில்லை என்றாலும், முதலீட்டாளர்கள் G7 மற்றும் EU நிதியமைச்சர்கள் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க போகிறார்கள் என்றும் காத்துக் கொண்டுள்ளனர். ஆக இதுவும் விலையில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை
இந்த குழப்பமான மன நிலைக்கும் மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதுவே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இன்று தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 742 ரூபாய் அதிகரித்து, 41,111 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் கடந்த நான்கு தினங்களாகவே சற்று சரிந்து வந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 1,800 ரூபாய் குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
ஆபரணம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, வழக்கம் போல எந்தவொரு செய்திக்கும் செவிமடுக்காத வகையில் கிராமுக்கு 3,936 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே சவரனுக்கு எட்டு ரூபாய் அதிகரித்து 31,488 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையில் கடந்த சில சந்தை தினங்களாக விலை குறைந்து இருந்தாலும் ஆபரண தங்கத்தின் விலையில் அது எதிரொலிக்கவில்லை என்றே கூறலாம்.
விலை அதிகம் குறைய வாய்ப்பில்லை
இந்த நிலையில் பல நிபுணர்கள் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்றும் கூறி வருகின்றனர். ஏனெனில் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரி விகிதம் என அனைத்தும் தங்கம் விலை குறைப்பு இந்தியாவில் அதிகம் தடுக்கலாம். இதனாலேயே இந்தியாவில் வரலாறு காணாத அளவு தங்கம் இறக்குமதியானது குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் - பிப்ரவரியில் தங்கம் இறக்குமதி 9% வீழ்ச்சி கண்டு 27 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதனால் அரசு எதிர்பார்த்ததை போல ஒரு புறம் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்திருந்தாலும், மறுபுறம் தங்க ஆபரண விலையானது சர்வதேச சந்தையில் குறையும் அளவுக்கு இங்கு குறைவதில்லை.