தங்கம் என்ற வார்த்தைக்கு மயங்காத பெண்கள் இல்லை என்றும் கூறலாம். அந்தளவுக்கு தங்கத்தின் மீது அபார பிரியம் கொண்டவர்கள் தான் இந்திய பெண்கள்.
அத்தகைய தங்கத்தினை ஆபரணமாக மட்டும் அல்லாது ப்யூச்சர் வர்த்தகத்திலும் முதலீடு செய்து லாபம் பெற்று வருகின்றனர் நம்மவர்கள்.
நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டு பெரும் ஏற்ற இறக்கத்தை அவ்வப்போது சந்தித்து வரும் தங்கத்தின் விலையானது, கடந்த இரண்டு தினங்களாகவே சற்று வீழ்ச்சியை கண்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் விலை?
கடந்த இரண்டு தினங்களாகவே சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலையானது வீழ்ச்சி கண்டு வருகிறது. சொல்லப்போனால் அவுன்ஸூக்கு நேற்று 1594.50 டாலராக அதிகபட்சமாக சென்ற நிலையில், இன்று குறைந்தபட்சம் 1574.80 டாலர்களாகவும் இருந்துள்ளது. எனினும் தற்போது இது 1575.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
இந்திய சந்தையில் விலை வீழ்ச்சி
கடந்த இரண்டு தினங்களாகவே தங்கத்தின் விலையானது உச்சத்திலிருந்து தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. சொல்லப்போனால் கடந்த வாரத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 41,293 ரூபாய் புதிய உச்சத்தினை கண்டிருந்த நிலையில், இன்று தற்போது 40,500 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தற்போதைய விலையுடன் ஒப்பிடும்போது சுமார் 793 ரூபாய் மூன்று சந்தை தினங்களில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும், இன்று மட்டும் 232 ரூபாய் வீழ்ச்சி கண்டு தற்போது வர்த்தகமாகி வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தினைப் போலவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சி கண்டு வருகிறது. உண்மையை சொல்லபோனால் தற்போது 45,869 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே திங்கட்கிழமையன்று 46,690 வரை சென்ற வெள்ளியின் விலையானது தற்போது 45,869 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இரண்டு நாட்களில் மட்டும் 821 ரூபாய் வெள்ளியின் விலை கிலோவுக்கு குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம்
சென்னையை பொறுத்த வரையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம், ஏனெனில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,912 ரூபாய்க்கும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 31,296 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்திருந்தாலும், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது பெரிதளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. எனினும், நேற்று ஒரு சவரனுக்கு 96 ரூபாய் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், இன்று 8 ரூபாய் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம்
சீனாவின் வுகான் மாநகரில் பணப்புழக்கம் நியாயமான முறையில் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு நாணயக் கொள்கைப் கருவியைப் பயன்படுத்துவதாக சீன அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில் நம்பிக்கையுடன் தங்கம் விலை கடந்த இரண்டு தினங்களாகவே வீழ்ச்சி கண்டு வருகிறது. கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு கொரோனாவின் தாக்கத்தை அவசர நிலை பிரகடனமாக அறிவித்தது.
கடன் ஆதரவு
ஏற்கனவே சீனாவிற்கு பல நாடுகளின் விமான போக்குவரத்து தடை செய்துள்ள நிலையில், சீனாவிலுள்ள முக்கிய பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. மேலும் தங்களது தற்காலிகமாக சேவையினை நிறுத்தி வைத்துள்ளன. இதனால் பொருளாதாரம் பாதிகப்படும் என்ற நிலையில், கொரோனா வைரஸூடன் போராடும் இந்த நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடன் ஆதரவு வழங்குவதாக சீனா அரசு உறுதியளித்துள்ளது.
வீழ்ச்சி தடுக்கப்படலாம்
இந்த நிலையில் சீனாவின் மத்திய வங்கி தனது ஆதரவை காட்டும் விதமாக, 1.2 டிரில்லியன் யுவான் மதிப்புள்ள பணப்புழக்கத்தை சந்தைகளில் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. சீனாவின் இத்தகைய நடவடிக்கையால் பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சி தடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை சரிய ஆரம்பித்துள்ளது.
கொரோனாவின் தாக்கம்
சீனாவின் கொரோனாவின் கொடிய தாக்கத்தால் இதுவரை 421 பேர் இறந்துள்ள நிலையில், தற்போது 17,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் பொருளாதார நிபுணர்கள் இந்த கொரோனாவின் கொடூரா தாக்கத்தால், உலகளாவிய வளர்ச்சியை இது குறைக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். ஒரு வருடத்திற்கு மேலாக மந்த நிலையை கண்டு வந்த பொருளாதாரம் தற்போது தான் மீளத் தொடங்கியது. இந்த நிலையில் இந்த தாக்கம் மீண்டும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை காணக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
தேவை பாதிப்பு
இந்தியாவை பொறுத்த வரையில் அதிக விலைகளும் பலவீனமான பொருளாதாரமும் தங்கத்தின் தேவையை பாதித்துள்ளன என்றே கூறலாம். ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கலில் வரி விகிதம் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறக்குமதி வரி விகிதம் 12.5% மற்றும் ஜிஎஸ்டி வரி 3% மாற்றம் இல்லாததால், சர்வதேச சந்தையில் விலை குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் ஆபரண தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.