சர்வதேச முதலீட்டுச் சந்தைக்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வந்த ரஷ்யா உக்ரைன் பிரச்சனையின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் ரஷ்யா - ஜெர்மனி உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் 2வது கட்டமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபரான ஜோ பைடன் உடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த மேற்கத்திய நாடுகள் தயாராக இருக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பை அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ஏற்றுக்கொண்டு உள்ளார்.
இதனால் முதலீட்டுச் சந்தையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துப் பங்குச்சந்தையில் மீண்டும் அதிகப்படியான முதலீடுகள் குவிந்துள்ளது. இதன் வாயிலாகத் தங்கம் விலையில் 2வது நாளாக இன்று சரிந்துள்ளது.
சர்வதேச சந்தை
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் அதிகமாக இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தங்கம் மீது அதிகம் முதலீடு செய்யத் துவங்கினர். இதனால் தங்கம் விலை சர்வதசே சந்தையில் 8 மாத உயர்வான 1900 டாலரை தொட்டது.
ரஷ்யா - உக்ரைன்
இன்று வர்த்தகத் துவக்கத்திலும் ரஷ்யா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்த காரணத்தால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 1,908 டாலர் வரையில் உயர்ந்தது.
விளாடிமிர் புடின் - ஜோ பைடன்
இந்தச் சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பை அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ஏற்றுக்கொண்ட அறிவிப்பு வெளியான நிலையில் போர் பத்தறம் குறைந்தது. இந்த அறிவிப்புக்குப் பின்பு 1,908 டாலரில் இருந்து 1,893 டாலருக்குக் குறைந்தது. அடுத்தச் சில மணிநேரத்தில் 1,888 டாலர் வரையில் சரிந்தது.
இன்றைய தங்கம் விலை
இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 0.5 சதவீதம் வரையில் சரிந்தது. ஆனால் சந்தை தடுமாற்றத்தில் தங்கம் விலை உயர துவங்கினாலும் ஏப்ரல் 2022 ஆர்டரின் 10 கிராம் தங்கம் விலை இன்னும் 0.24 சரிவில் 49,990 ரூபாய் அளவில் உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.72 சதவீதம் சரிந்து 63,442.00 ரூபாயாக உள்ளது.
ஸ்பாட் சந்தை
மேலும் MCX சந்தையின் ஸ்பாட் சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 49,698 ரூபாயாகவும், 1 கிலோ வெற்றி விலை 63,312 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை 2வது நாளாகச் சரிவில் உள்ளது, இந்தச் சரிவு முதலீட்டு சந்தையின் தடுமாற்றத்தின் மூலம் ஏற்படும் காரணத்தால் நீண்ட கால முதலீட்டாளர்கள் காத்திருந்து முதலீடு செய்வதே சரியாக இருக்கும்.