நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தால் சீனாவில் இதுவரை 2,592 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகிறது, இன்று வரையில் சுமார் 77,150 பேர் இந்த தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சீனாவில் மட்டும் அல்ல, ஹாங்காங்கில் இருவர் இறந்துள்ளதாகவும், 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பல நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் செய்திகளை நாளுக்கு நாள் பார்க்க முடிகிறது.
ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி
இது ஒருபுறம் இருக்க, சீனாவின் வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது எனலாம். இதன் தாக்கம் மற்ற நாடுகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவின் முக்கிய வர்த்தக பங்காளியான இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த இரு நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது எனலாம். இந்த நேரத்தில் ரூபாயின் மதிப்பு 71.83 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.
தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு
சர்வதேச அளவில் நிலவி வரும் அழுத்தம் காரணமாக தங்கம் விலையானது கொடிகட்டி பறந்து வருகிறது. ஏனெனில் கொரோனாவின் தாக்கத்தால் உலக நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைய தொடங்கியுள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் தங்கம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை
தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில், தொடர்ந்து ஐந்து சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 974 ரூபாய் ஏற்றம் கண்டு, 43,640 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 10 கிராம் தங்கத்தின் விலையானது 1800 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது குறிபிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் விலை
கடந்த இரு வாரங்களாகவே ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, இன்று மட்டும் அவுன்ஸூக்கு 29.45 டாலர்கள் அதிகரித்து, 1,677.85 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இன்று மட்டும் சர்வதேச சந்தையில் 1.81% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் தங்க இடிஎஃப் குறியீடுகளும் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன.
இதுவும் ஒரு காரணம்?
இந்த கொரோனாவின் அச்சம் தற்போது சீனாவினை தாண்டி பல நாடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் வட்டி விகிதத்தினை குறைக்ககூடும் என்றும் நிபுணர்கள் பந்தயம் கட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறைந்த வட்டி விகிதம், வட்டி அல்லாத மகசூல் சொத்துகளின் முறையீட்டையும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளன. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது (22 கேரட்) கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து 4,100 ரூபாய்க்கும், இதே சவரன் தங்கம் விலையானது 32,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. தொடர்ந்து ஆறு தினங்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆறு நாட்களில் சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்து இன்று 32,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.