அமெரிக்கா ஈரான் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு விலை ஏற்றம் கண்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அந்த நேரத்தில் சவரனுக்கு 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டி வர்த்தகமானது.
இப்படி ஒரு நிலையில் தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வரும் பிரச்சனை காரணமாக விலை மீண்டும் வரலாறு காணாத அளவு உச்சம் கண்டுள்ளது.
தங்கத்தில் முதலீடு
அதிலும் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்கு சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஈரான் அமெரிக்கா இடையேயான அரசியல் பதற்றம், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது. ஏனெனில் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் பிரச்சனைகளால் பங்கு சந்தைகள், தொழில்துறையில் முதலீடுகளை தவிர்த்து விட்டு, முதலீட்டாளர்கள் சர்வதேச அளவில் தங்கத்தில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர்.
தங்கம் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தைகளின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது நான்கு நாட்களில் 2000 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த செப்டம்பரில் சென்ற உச்சத்தையும் தாண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது 40,760 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தற்போது விலை குறைந்திருந்தாலும் இன்றைய உச்ச விலையானது 41,293 ரூபாயாகும். கிட்டதட்ட நேற்றைய முடிவில் இருந்து 660 ரூபாய் ஏற்றமாகும்.
வெள்ளி விலை
தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து சற்று ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் சீனாவில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக வெள்ளியின் விலையானது சற்று குறைந்த அளவே ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் கிட்டதட்ட 800 ரூபாய் வரை ஏற்றம் கண்டு இன்று 49423 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இதுவே தற்போது 48,711 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் விலை
சர்வதேச சந்தையை பொறுத்தவரையில் தங்கத்தின் விலையானது பலமான ஏற்றம் கண்டது. குறிப்பாக சொல்லப்போனால் இன்று காலையில் அவுன்ஸூக்கு 1,612.95 டாலர்கள் வரை சென்று தற்போது கீழே இறங்கியுள்ளது. இதே தற்போது 1575.20 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே வெள்ளியின் விலை தற்போது 18.323 டாலராக இருந்தாலும், இன்று காலையில் 18.887 டாலர்களாகவும் வர்த்தகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் வீழ்ச்சி
இதெல்லாவற்றையும் மேலும் சப்போர்ட் செய்யும் விதமாக ரூபாயின் மதிப்பும் இன்று காலையில் 72.11 ரூபாயை தொட்டது. எனினும் தற்போது 71.69 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது தங்கம் விலையேற்றத்திற்கு மேலும் வழி வகுத்தது என்றே கூறலாம்.
ஆபரண தங்கம் விலை
இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆபரண தங்கத்தின் விலையானது பெரிதும் குறைவது கஷ்டமே. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 672 ரூபாய் அதிகரித்து, 31,416 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சவரனுக்கு 1,500 ரூபாய்க்கும் மேல் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இது வரவிருக்கும் பொங்கல் பண்டிகை தினங்களில் விலை அதிகரிக்கலாம் என்றும், ஏனெனில் அந்த சமயத்தில் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.