அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தினை கண்டு வருகிறது. ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கம் விலையினால் ஆபரண விற்பனையானது குறைந்து வரும் நிலையில், இனி என்னவாகுமோ? ஏனெனில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில், சாமனியர்கள் தங்கத்தினை நினைத்து மட்டும் தான் பார்த்துக் கொள்ள முடியும் போல.
இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக தங்கம் விலையானது இன்னும் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்கா டாலரின் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தில் இருந்து வரும் நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது.
புதன் கிழமையன்று விலை எப்படி?
கடந்த புதன் கிழமையன்று தங்கத்தின் விலையானது 1% அதிகரித்து அல்லது 580 ரூபாய் அதிகரித்து 55,597 ரூபாயாக வரலாறு காணாத உச்சத்த்தினை தொட்டுள்ளது. இதே வெள்ளியின் விலையானது 3.2% அதிகரித்து அல்லது கிலோவுக்கு 2,250 ரூபாய் அதிகரித்து வர்த்தகமாகியது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் விலை நிலவரம்
இதே சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு புதன்கிழமையன்று அதிகபட்சமாக 2057.50 டாலர்கள் வரையில் வர்த்தகமாகிய நிலையில், இன்றும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகி வருகிறது. சரி என்ன தான் காரணம். அனுதினமும் இப்படி தங்கம் விலையானது கொரனாவினை விட மிக வேகமாக ஏற்றம் கண்டு வருகிறதே.
முக்கிய காரணம்
தங்கம் விலையானது அதிகரிக்க பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது டாலர் மதிப்பு வீழ்ச்சி தான். ஏனெனில் சர்வதேச நாடுகளில் மிக முக்கியமாக பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நாடு வல்லரசான அமெரிக்கா தான். இதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் பார்வையில் முதல் முக்கியத்துவம் என்பது அமெரிக்காவிற்கே. ஆனால் அங்கு தான் தற்போது கொரோனா தனது கோரத்தாண்டவத்தினை அதிகம் காட்டி வருவதால், அமெரிக்காவின் பொருளாதாரம் என்ன ஆகுமோ? என்ற பய உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு
ஆக இதற்கும் நடுவில் சரிந்து வரும் பங்கு சந்தையில் தங்களது முதலீடுகளை தவிர்த்து, பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர் முதலீட்டாளர்கள். இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தினை தொட்டு வருகிறது. இன்னும் இது ஏற்றம் காணவே வழி வகுக்கும்.
குறைவான வட்டி விகிதம்
உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சரிந்து வரும் பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த ஒவ்வொரு நாடும் தங்களது மத்திய வங்கிகள் மூலம் வட்டியை குறைத்து வருகின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வருவாயும் குறையும் என்பதால், தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இது வரையில் 34% அதிகரித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் தங்கமானது பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுவதால், பாதுகாப்பு காரணம் கருதி தங்கத்தினை வாங்கி வைக்கின்றனர். எல்லாற்றுக்கும் மேலாக அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், இன்னும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் செல்கிறது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற பயமும் நிலவி வருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது தற்போது, அவுன்ஸூக்கு 8.55 டாலர்கள் அதிகரித்து, 2045 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. ஏற்கனவே நிபுணர்கள் மத்தியில் தங்கம் விலையானது, இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 டாலர்களை தொடும் என்றும் கூறியிருந்த நிலையில், தற்போதே 2045 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது 3000 டாலர்களை கூட தொடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையினை விட, வெள்ளியின் விலையானது பட்டையை கிளப்பி வருகிறது. இன்று 0.247 டாலர்கள் அதிகரித்து 27.142 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியானது வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாமல், தொழில் துறையிலும் பயன்படுத்தப்படுவதால் அதன் விலை இன்னும் கூடுதலாக வர்த்தகமாகி வருகிறது. ஏனெனில் சீனாவில் தொழில் துறையானது மீண்டு வந்து கொண்டு இருக்கும் நிலையில் வெள்ளியின் தேவையானது அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது தொடர்ந்து, இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலையானது 210 ரூபாய் அதிகரித்து, 55,302 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் எதிரொலியாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 885 ரூபாய் அதிகரித்து 72,778 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 1.23% ஏற்றமாகும். இன்னும் தொடர்ந்து ஏற்றம் காணும் நிலையிலேயே உள்ளது.
போகிற போக்கினை பார்த்தால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்னும் ஏற்றம் தான் காணும் என்கிறார்கள் நிபுணர்கள். அப்படி ஒரு வேளை இந்த உலோகங்களில் பெரிய மாற்றம் வந்தால், அது கொரோனா தடுப்பூசியினாலேயே இருக்கும் என்றும் கூறுகின்றனர்.