இன்றளவிலும் உலகம் முழுக்க தங்கம் என்றாலே அது ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது. இது இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க அப்படித்தான்.
இந்த நிலையில் உலகத்தினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, உலகளவில் ஒட்டுமொத்த தொழில் துறையும் முடங்கியுள்ளது.
நுகர்வும் குறைந்து வருகிறது. இதனால் தேவையும் குறைந்து வருகிறது. குறிப்பாக தொழில்துறை தேக்கத்தினால் முதலீட்டாளர்களின் பார்வை, பாதுக்காப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
பல்வேறு அதிரடி நடவடிக்கை
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஒவ்வொரு நாடுகளின் அரசும் மத்திய வங்கிகளும், அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தினை தக்க வைத்துக் கொள்ள அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் பெரிய அளவில் கைகொடுத்ததாக தெரியவில்லை. இதனால் பல நாடுகளின் முக்கிய முதலீட்டு அம்சங்களாக திகழும் பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், பத்திர சந்தைகள் என அனைத்திலும் வீழ்ச்சி தான் நிலவி வருகிறது.
அதிகரிக்கும் முதலீடு
இதனையடுத்து ஒட்டுமொத்த முதலீட்டாளர்கள் பார்வையும் தங்கத்தின் மீது விழ ஆரம்பித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையானது அவ்வப்போது சரிந்தாலும், தொடர்ந்து ஏற்றம் காணவே செல்கிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று ஏற்றம் கண்டுள்ளது. இது மற்ற நாடுகளின் உள்நாட்டு சந்தைகளிலும் தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலை 9.60 டாலர்கள் அதிகரித்து 1488.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவில் 1,477.90 டாலர்களாக முடிவடைந்த தங்கம் விலையானது, இன்று காலை தொடக்கத்திலேயே 1,473.50 டாலராக தொடங்கியது. எனினும் தற்போது வரை அதிகபட்சமாக 1489.20 டாலர்கள் வரை சென்று, குறைந்தபட்சமாக 14,73.50 ஆகவும் இருந்துள்ளது. ஆக மொத்தத்தில் தொடக்க விலையும், குறைந்தபட்ச விலை கிட்டதட்ட ஒரே விலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸில் விலை
கடந்த வாரம் முழுக்க தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த தங்கத்தின் விலையானது, வியாழக்கிழமை காலையில் நல்ல வீழ்ச்சியில் இருந்த தங்கத்தின் விலை, மாலையில் மீண்டும் ஏற்றத்தினையே கண்டது. இந்த நிலையில் நேற்றைய முடிவு விலையானது 39,831 ஆக முடிவடைந்த நிலையில், இன்று காலையில் 39,900 ரூபாயாக சற்று அதிகரித்து தான் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது 301 ரூபாய் அதிகரித்து, 40,132 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
மொத்தமாக பார்த்தால் வீழ்ச்சி தான்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பியூச்சர் கோல்டின் விலையானது 45,000 ரூபாயினை தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின்னர் சர்வதேச சந்தையில் கண்டு வரும் வீழ்ச்சி காரணமாக, எம்சிஎக்ஸ் சந்தையிலும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் விலை சற்று அதிகரித்து இருந்தாலும், சமீபத்திய உச்ச விலையுடன் ஒப்பிடும்போது அதன் வீழ்ச்சி சுமார் 5000 ரூபாய் குறைவு தான்.
சர்வதேச சந்தையில் வெள்ளி
சர்வதேச சந்தையிலும் வெள்ளியின் விலை இரண்டாவது நாளாக சற்று ஏற்றம் கண்டு வருகிறது. சொல்லப்போனால் தற்போது 4.13% அதிகரித்து 12.325 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச அளவில் தொழில்சாலைகள், இயந்திரங்கள் உற்பத்தி முடங்கி உள்ளதால், வெள்ளியின் விலை பெரியளவில்; ஏற்றம் காணாவிட்டாலும், சற்று அதிகரித்து வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையினை போல் வெள்ளி விலையும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், இன்று, 858 ரூபாய் அதிகரித்து, 35,959 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது இந்த வாரத்தின் இரண்டாவது நாள் ஏற்றம் இதுவாகும். சீனாவில் தற்போது தான் தொழில் சாலைகள் உற்பத்தியை தொடங்கியுள்ள நிலையில், வெள்ளியின் தேவையும் இனி கூடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண விலை
இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது 3,835 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 30,680 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தொடர்ச்சியாக இந்த வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விலை குறைவதும், அதிகரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது..