உலகமே அதிர்ந்து போயுள்ள கொரோனாவால் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 75,000 பேருக்கு மேல் இந்த வைரஸால் தாக்கம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் பாகுபாடின்றி அனைத்து நாடுகளுக்கும் பரவும் இந்த கொரொனாவால் மக்கள் மிக அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் என்றே கூறலாம்.
சீனா மக்களை வாட்டி வதைக்கும் இந்த கொரோனாவால் மக்கள் மட்டும் அல்ல, பொருளாதாரமும் சீர்குலைந்து போயுள்ளது என்றால் அது பொய்யில்லை.
வர்த்தகம் முடக்கம்
ஏனெனில் அந்தளவுக்கு சீனாவின் வர்த்தகம் முடங்கி போயுள்ளது. சீனாவினையே பெரிதும் நம்பியுள்ள மற்ற நாடுகளும் பெருத்த அடி வாங்க தொடங்கியுள்ளன. சொல்லப்போனால் உலகெங்கிலும் சத்தமேயில்லாமல், தனது ராஜ்ஜியத்தை பரப்பி வந்த சீனா, தற்போது அதன் வணிகம் தடைபட்டுள்ள நிலையில், அது சர்வதேச வணிகத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பு புகலிடம்
உண்மையை சொல்லப்போனால் கொரோனா வைரஸ் சீனாவின் ஜிடிபியிலேயே கணிசமான அளவு எடுத்துக் கொள்ளும் என்றும் ஆய்வாளார்கள் கூறியுள்ளார். இதே உலக அளவில் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என்றும் கூறி வருகின்றனர். இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாப்பின் புகலிடமான தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
தங்கம் மீது ஆர்வம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பயத்தால், உயிர்பலியும் அதிகரித்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதன் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சர்வதேச பொருளாதாரம் மேலும் சரிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இதனால் உலக அளவில் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
சர்வதேச சந்தை விலை
கடந்த வாரத்திலிருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, தொடர்ந்து ஏழு சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று அவுன்ஸூக்கு 1615.85 டாலர்களாக அதிகபட்சம் வர்த்தகமாகிய நிலையில், இன்று காலையில் 1.612.95 டாலர்களாக தொடங்கியுள்ள நிலையில், தற்போது 1,612.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தங்கம் விலை 2014க்கு பிறகு தற்போது தான் இந்த உச்சத்தை தொட்டுள்ளது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலை எதிரொலித்துள்ளது. அவ்வப்போது சில சரிவைக் கண்டாலும் தங்கம் விலையானது தொடர்ந்து இரண்டு வாரமாகவே ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் தங்கம் விலை 700 ரூபாய்க்கு மேல் ஏற்றம் கண்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் கடந்த இரண்டு தினங்காகவே, தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 250 ரூபாய் அதிகரித்து வெள்ளியின் விலை 47820 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே போல் சர்தேச சந்தையிலும் 0.28% அதிகரித்து 18.363 டாலர்களாக வர்த்தகமாகியும் வருகிறது.
தங்க ஆபரணம் விலை
சென்னையில் இன்று தங்கத்தில் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும், கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 3,966 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே போல் சவரனுக்கு 31,728 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட்ட் வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்து 31,720 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வப்போது 10 ரூபாய் 40 என விலை சற்று வீழ்ச்சி கண்டாலும், விலையேற்றம் என்னவோ நூறு ரூபாய் மேல் அதிகரித்து தான் வருகிறது.