இந்தியாவில் கடந்த 2 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் முதலீட்டாளர்களும், சாமானிய மக்களும் இப்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் அன்னிய முதலீட்டாளர்களின் அதீத முதலீட்டின் காரணமாகத் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்தது.
தற்போது பல நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலை சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் அதிகளவிலான முதலீடுகள் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து பங்குச்சந்தைக்குச் சென்று வருகிறது.
இதனால் கடந்த 15 முதல் 20 நாட்களில் தங்கம் விலை படிப்படியாகக் குறைந்தது, இந்த விலை சரிவின் காரணமாகப் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.
அமெரிக்கத் தேர்தல்
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் பங்குச்சந்தைக்கு வருவது தான். இதேகாலகட்டத்தில் இந்தியச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
தங்கம் டிமாண்ட்
உலக நாடுகள் முழுவதும் பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்த காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்தது. இது தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளுக்குச் சிறந்த வாய்ப்பாக மாற்றியுள்ளது.
விலை சரியத் துவங்கியதால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தங்கம் அதிகளவில் வாங்கப்பட்டது இதனால் டிமாண்ட் அதிகமாகி தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது.
தீபாவளி
தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் தங்கம் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது, குறிப்பாக ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இனி வரும் காலகட்டத்தில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் அளவு அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள்
அமெரிக்காவில் கொரோனாவால் வேலைவாய்ப்புகளை இழந்தோரின் எண்ணிக்கை 2வது வாரமாகத் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தை வர்த்தகம் பாதித்துள்ளது.
இது அமெரிக்க முதலீட்டாளர்களைப் பல வகையில் பாதித்துள்ளது, குறிப்பாகப் பியூச்சர் சந்தை முதலீட்டாளர்கள் இதனால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
முதலீடுகள்
இதனால் அமெரிக்கச் சந்தையில் பங்குச்சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் பெருமளவு தங்கம் மீது திரும்பியுள்ளது. இதன் காரணமாகவும் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
ஸ்பாட் கோல்டு ரேட்
இந்திய தங்க விற்பனை வர்த்தகச் சந்தையில் புதன்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை 50750 ரூபாயாக இருந்த நிலையில் வியாழக்கிழமை 50760 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் தங்கத்தின் சராசரி விலையான 50840 ரூபாய் விலையை விடவும் குறைவு என்றாலும் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் மக்கள் முதலீடு செய்வதில் குழப்பத்தில் உள்ளனர்.
சர்வதேச சந்தை விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்று அதிகப்படியாகச் சில நிமிடங்கள் மட்டும் 1,34,625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பெரும்பாலான நேரத்தில் சராசரியாக 1,33,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட இந்த அதிரடி உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வியாழக்கிழமை
ஆனால் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை காலை சரிவுடன் துவங்கினாலும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. 2 மணி அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,34,199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் டாலர் மதிப்பில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,819 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாத ஆர்டர்கள்
இன்று MCX சந்தையில் டிசம்பர மாத்திற்கான ஆர்டர்கள் விலை 0.45 சதவீதம் அதிகரித்து 10 கிராம் தங்கம் விலை 48,730 ரூபாயாக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை 0.33 சதவீதம் அதிகரித்து 60,042 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 12ஆம் தேதி அதிகப்படியாக 74.89 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 14 நாட்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலிமை அடைந்து தற்போது 73.83 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
ரூபாய் வலிமை
டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாகத் தங்கம் விலையில் மிகவும் குறைவான உயர்வை எதிர்கொண்டு வருகிறோம், இல்லையெனில் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்திருக்கும்.
கடந்த 1 மாத காலமாகவே அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. அடுத்த சில மாதத்தில் டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் 20 சதவீதம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.