தங்கம் வெறும் நகையாகவும், பணக்காரர்கள் மட்டுமே வாங்க கூடிய பொருள் நிலையில் இருந்து எப்போது மாறிவிட்டது. இன்று ஒவ்வொரு குடும்பமும் தங்கத்தை நீண்ட கால முதலீடாகப் பார்ப்பது மட்டும் அல்லாமல் பணத்தைச் சேமிக்கும் முக்கியக் கருவியாகவும் பார்க்கிறது.
அதிலும் குறிப்பாக நடுத்தரக் குடும்பங்கள் அனைத்தும் மாதம் சேமிப்பு முறையில் தங்கத்தை வாங்க துவங்கியுள்ளனர். இது மட்டுமா ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளும் தனது நிதி புழக்கத்தைக் கட்டுப்படுத்த அதிகளவிலான தங்கத்தை வாங்கி வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தனது இருப்பில் இருக்கும் தங்கத்தைக் கடந்த 2 வருடமாக அவ்வப்போது விற்பனை செய்து அதிகப் பணத்தைப் பார்த்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது, இதற்கு முக்கியக் காரணம் என்ன..?
அமெரிக்கா
அமெரிக்காவின் மிதமானச் சில்லறை பணவீக்க தரவுகள் மற்றும் சர்வதேச நாணய சந்தையில் பதிவான ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்க டாலர் மதிப்பு 7 மாத சரிவை அடைந்துள்ளது. இதன் வாயிலாகப் பிப்ரவரி மாதத்திற்கான தங்க பியூச்சர்ஸ் கான்டிராக்டில் 10 கிராம் தங்கம் விலை வரலாறு காணாத உயரத்தைத் தொட்டு உள்ளது.
மத்திய அரசு
இந்திய மக்கள் தங்கத்தை வாங்கும் அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தங்க முதலீட்டுப் பத்திரத்தை வெளியிட்டது, ஆனால் மக்கள் இதற்குப் போதுமான வரவேற்பைக் கொடுக்கவில்லை. இதேவேளையில் இந்தியச் சந்தைக்குக் கொண்டு வரப்படும் தங்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அதிகப்படியான வரியை விதித்தது.
திருமண சீசன்
ஆனாலும் இந்தத் திருமண சீசனில் அனைத்து சந்தைகளிலும் தங்கம் நகை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் மூலம் எவ்வளவு மாற்று முதலீடுகள் வந்தாலும் சரி, வரியை உயர்த்தினாலும் சரி தங்கம் மீதான ஈர்ப்பு இந்திய மக்களுக்கு எப்போது நீங்காது என உறுதியானது.
வரலாற்று உச்சம்
இந்த நிலையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இதுநாள் வரையில் MCX சந்தையில் அதிகப்படியாக 56,191 ரூபாய் அளவீட்டை மட்டுமே உச்ச அளவாகக் கொண்டு இருந்த நிலையில், தற்போது 56,245 ரூபாய் என வரலாற்று உச்ச விலை MCX சந்தையில் வெள்ளிக்கிழமை பதிவானது.
எம்சிஎக்ஸ் சந்தை
வார இறுதி நாட்கள் வர்த்தகத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கம் விலை மீண்டும் உயர துவங்கியது இதனால் 10 கிராம் தங்கம் விலை 56,370 ரூபாய் வரையில் உயர்ந்தது.
சர்வதேச சந்தை
இதேவேளையில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 2.95 சதவீதம் உயர்ந்து 1,920 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
சீனா லாக்டவுன்
தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் தொடர்ந்து வாங்குவதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, குறிப்பாகச் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த நாளில் இருந்து தங்கம் மீதான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனாலேயே தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.
டாலர் இன்டெக்ஸ்
தங்கத்திற்கு டிமாண்ட் அதிகரித்து வரும் நேரத்தில் டாலர் இன்டெக்ஸ் 7 மாத சரிவை எட்டியிருக்கும் காரணத்தால் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பொருளாதார மந்த நிலை குறையும் வரையில் தங்கம் விலையில் பெரும் மாற்றத்தை பார்க்க முடியாது. ஆனால் மத்திய வங்கி பெரிய அளவிலான வட்டியை உயர்த்தினால் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.