துருக்கியில் மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சில உலக நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.
இந்த புதையலின் இன்றைய இந்திய மதிப்பு கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. அதாவது 6 பில்லியன் டாலராகும்.
தங்க புதையல்
இந்த தங்க புதையலின் அளவு சுமார் 99 டன் இருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. துருக்கியின் Gubertas என்ற உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசின் செய்தி நிறுவனமான அனடோலு (Anadolu) கூறியுள்ளது.
கொரோனா காலத்தில் அதிர்ஷ்டம்
இந்த செய்தி வெளியானதை அடுத்து இந்த உர நிறுவனத்தின் பங்கு விலையானது, Turkish stock exchangeல் 10% அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நெருக்கடியாக இந்த கொரோனா காலத்தில், இப்படி ஓர் அதிர்ஷ்டமான புதையல் கிடைத்ததை அடுத்து, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை ஓரளவு எதிர்கொள்ள முடியும் என்று அந்த நாட்டின் விவசாய கூட்டுறவுத் தலைவரான பஹ்ரெடின் பொய்ராஷ் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உற்பத்தி இலக்கு
மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இங்கு தங்கம் வெட்டி எடுக்கும் பணி தொடங்கும் என்றும் பொய்ராஷ் கூறியுள்ளார்.
அண்மையில், 38 டன் தங்கத்தை உற்பத்தி செய்ததன் மூலம், ஒரு பெரிய சாதனையை துருக்கி படைத்துள்ளது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தி, 100 டன்னாக உயரும் என, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் ஃபெய்த் டான்மேஷ் கடந்த செப்டம்பரில் கூறியிருந்தார்.
சில நாடுகளின் ஜிடிபி
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பானது, சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கண்டுபிடிப்பானது துருக்கி பொருளாதாரத்தினை மேம்படுத்த பெரிதும் மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள், அண்டை நாடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற அதிர்ஷ்டங்கள் பெரியளவில் கைகொடுக்குமே.