தங்கத்தினை ஆபரணமாக மட்டும் அல்ல முதலீடாகவும் செய்யலாம். அதுவும் நிமிடத்துக்கு நிமிடம் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு சந்தையில் வர்த்தகமாகும் தங்கத்தினை வாங்கி வைத்து பின் லாபம் பெறுவது ஒரு வகை.
இன்னும் சிலர் ப்யூச்சர் வர்த்தகத்தில் விலை குறையும் போது வாங்கி வைத்து, பின்னர் அதை நல்ல லாபம் கிடைக்கும் போது விற்பதும் உண்டு.
இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த தங்கத்தின் விலையானது, நடப்பு வாரத்தில் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தங்கம் விலை அதிகரித்து வருகிறது
கடந்த செவ்வாய்கிழமை முதல் சற்று ஏற்றம் காண ஆரம்பித்த தங்கத்தின் விலையானது 37,738 ரூபாய் வரை வர்த்தகமாகி பின்பு, 37,699 ரூபாயில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது 37,708 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது ஸ்பாட் சந்தைகளில் நிலவி வரும் தேவை, மற்றும் சர்வதேச அளவில் நிலவி வரும் உறுதியான போக்கினையும், யூக வணிகர்கள் கண்கானித்து வரும் நிலையில் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்றம்
சொல்லப்போனால் சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நல்ல ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று அவுன்ஸூக்கு 1463 டாலராக இருந்த தங்கத்தின் விலையானது 3 நாட்களில் 1483 வரை சென்று திரும்பியது. இந்த நிலையில் தற்போது 1477.85 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.
விலையேற்றத்திற்கு என்ன காரணம்?
தங்கம் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் சர்வதேச அளவில் நிலவி வரும் போக்கு தான் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் குறித்தான சாதகமான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், டிசம்பர் 15ம் தேதியன்று அமெரிக்கா கூறியது போல், சீனா பொருட்களுக்கு வரியை உயர்த்துமா? இல்லையெனில் சமரசம் செய்து வரி அதிகரிப்பு இருக்காதா என்ற எதிர்பார்ப்புகளினாலேயே அதிக அளவிலான முதலீடுகள் செய்யப்படாமலேயே முதலீட்டாளர்கள் காத்துள்ளனர்.
சந்தைக்கு சாதகமான நுகர்வோர் குறியீடு
எனினும் பெரும்பாலோனோர் வர்த்தக ஒப்பந்தம் போடப்படலாம் என்ற சாதகமான யூகத்தினாலேயேவ் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. இது தவிர அமெரிக்காவின் நுகர்வோர் குறித்தான குறீயீடு சற்று சாதகமாக வந்துள்ள நிலையில், இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முந்தைய வட்டி குறைப்பானதும் தற்போது கைகொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளி விலை அதிகரிப்பு
விலையுயர்ந்த உலோகங்கள் பட்டியியலில் தங்கத்திற்கு அடுத்தாற்போல் இருப்பது வெள்ளி தான். தங்கத்தினை போல வெள்ளியின் விலையும் கடந்த இரண்டு நாட்களாகவே ஏற்றம் கண்டு வரும் நிலையில், தற்போது மார்ச் கான்டிராக்டில் 43,917 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே சர்வதேச சந்தையில் 16.902 டாலராக வர்த்தகமாகியும் வருகிறது.
ஆப்ரண தங்கத்தின் விலை எப்படி?
டிசம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே ஒரிரு நாட்கள் மற்றும் விலை அதிகரித்த நிலையில், மற்ற நாட்களில் வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் செவ்வாய்கிழமையன்று சவரன் நகை (22 கேரட்) 28728 ரூபாய்க்கு வர்த்தகமாகிய நிலையில், இன்று சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 28,872 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதே போல் 24 கேரட் தங்கத்தின் (10 கிராம்) விலையானது 180 ரூபாய் அதிகரித்து 39,350 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.