தங்கம் விலை கடந்த சில மாதங்களாகச் சந்தைக்கு ஏற்ப இல்லை, இதற்கு இந்தியாவும், சீனாவும் முக்கியக் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அது தான் உண்மை.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கம், பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு, ரஷ்ய உக்ரைன் பிரச்சனை, பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை, நாணய மதிப்புச் சரிவு எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலை இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1900 டாலரை தாண்டியுள்ளது.
ஆனால் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் காலத்தில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சிறப்பாக இருந்த வேளையில் தங்கம் விலை குறைய வேண்டும் ஆனால் தொடர்ந்து உயர்வாகவே இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் இந்தியா மற்றும் சீனா.
இந்தியா சீனா
உலகத் தங்க கவுன்சில் தகவல் படி கடந்த ஆண்டு இந்தியாவில் நகை வாங்குவோர் சுமார் இரு மடங்கு அதிகத் தங்கத்தை வாங்கிய காரணத்தால் இந்திய தங்க விற்பனை 611 மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது
இதேபோல் சீனாவில் தங்கம் வாங்கும் அளவீடு சுமார் 63 சதவீதம் அதிகரித்து 675 டன் ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் விற்பனை
2021ல் மட்டும் இந்தியா மற்றும் சீனா சுமார் 556 டன் தங்கத்தைக் கூடுதலாக வங்கியுள்ளது. இதே 2021 ஆம் ஆண்டில் தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்தது. இதனால் 558 டன் தங்கம் விற்பனை இப்பிரிவின் மூலம் சரிந்தது. இது எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு EFT மூலம் அதிகத் தங்கத்தை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
சப்ளை மற்றும் டிமாண்ட்
இந்தச் சப்ளை மற்றும் டிமாண்ட் ஈடு செய்யப்பட்டதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து உயர்வாக இருக்க முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட் லாக்டவுன்
சீனா மக்கள் 2019ல் சுற்றுலாவுக்காக மட்டுமே 255 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளனர். கொரோனா தொற்றுக் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயும், நாட்டுக்குள்ளேயும் முடங்கிய காரணத்தால் இந்தத் தொகை அப்படியே தங்கம் மீது திரும்பியுள்ளது.
திருமணங்கள்
இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக 1.5 வருடம் மொத்தமாக முடங்கிய நிலையில், 2021ல் இந்தியா முழுவதும் திருமணங்கள் ஏக்கச்சகமாக நடந்தது. இந்தியத் திருமணங்களில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கும் காரணத்தால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
நிலைமை மாறியது
இந்தியாவில் 10 கிராம் தங்கம் 30000 ரூபாய் தாண்டு போதெல்லாம் தங்கம் விற்பனை மற்றும் இறக்குமதி பெரிய அளவில் குறையும், ஆனால் தற்போது இந்த நிலை மலையேறியது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வருமானம், வேலைவாய்ப்பு இழந்த காலகட்டத்திலும் தங்கம் இறக்குமதி 2 மடங்கு அதிகரித்துள்ளது தான் முக்கியமான விஷயம்.