இந்தியாவில் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகம். அதுவும் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் தங்கத்தினை வாங்க ஆசைப்படுகின்றனர்.
வசதியான குடும்பங்களில் ஆடம்பரத்திற்காக நகை வாங்குகின்றனர் என்றால், இதுவே நடுத்தர குடும்பங்களில் அவசர தேவையின் போது ஆபத்பாந்தவனாக இருக்கும் என்பதால் பலர் வாங்குகின்றனர்.
ஏனெனில் அவசரத் தேவைக்கு கேட்டவுன் குறைந்த நேரத்தில், கேட்ட பணம் கிடைக்குமெனில் அது தங்கத்திற்கு தான்.
அவசர தேவைக்கு பணம் கிடைத்தால் போதும்
ஆனால் இப்படி அவசரமான காலத்தில் பணம் கிடைத்தால் போதும் என? ஏதோ ஒரு நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெறுபவர்களும், விற்பனை செய்பவர்களும் தான் அதிகம். அதிலும் கிராமப்புறங்களில் தான் இந்த நிகழ்வு மிக அதிகம். அதிலும் இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இது மிக அதிகளவில் அதிகரித்துள்ளது எனலாம். ஏனெனில் கிராமப்புறங்களில் பலரும் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர்.
பணப்புழக்கம் குறைவு
ஆக கையில் பணப்புழக்கம் குறைந்தபோது, நிறைய தனி நபர்கள் கையில் எடுத்த ஒரே விஷயம் நகைக்கடன் தான். எனினும் சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், தற்போது லாபத்தினை பதிவு செய்துள்ளனர் என்று கூட கூறலாம். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைக்கும், இன்றைய விலைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ஆனால் இப்படி விற்கையில் சரியான லாபத்தில் விற்றார்களா என்பது தான் இங்கு கேள்வியே?
உங்களை ஏமாற்றலாம்
ஏனெனில் சாதரணமாக நகைக்கடைகளில் விற்கும் போது, அவர்கள் செய்கூலி, சேதாரம், தேய்மானம், தங்கத்தின் தூய தன்மை என பல வற்றிலும் கழிக்க வாய்ப்புண்டு. அதுவும் சரியான முறையில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இதே மீண்டும் பழைய நகைக்கு, புதிய நகையாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், அல்லது இடைத்தரகர் என பல வகையிலும் ஏமாற்றப்பட வாய்ப்புண்டு.
எங்கு தான் நகையை விற்பது?
அதெல்லாம் சரி வேறு எங்கு தான் நகையை விற்பது? யாரைத் தான் நம்புவது? தற்போது இது போன்ற பழைய தங்கத்தினை வாங்கவே பல நிறுவனங்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஆட்டிகா (Attica), டி கோல்டு (D Gold) உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன. ஆக இதுபோன்ற தனித்துவமான நிறுவனங்களில் விற்கும் போது உங்கள் பொருளின் முழு மதிப்பும் உங்களுக்கு தெரியவரும்.
ஆட்டிகா போன்ற நிறுவனங்களில் விற்கலாம்
முத்தூட் கோல்டு நிறுவனம் 10,000 ரூபாய் வரையிலான தொகையினை கேஸ் ஆக தருகின்றது. மீதமுள்ள தொகையினை நெஃப்ட் பரிமாற்றத்தின் மூலம் உங்கள் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்கின்றது. இதுவே ஆட்டிகா நிறுவனம் தங்கத்திற்கு பதிலாக பணத்தினை கொடுக்குகிறது. அதுமட்டும் அல்ல வேறு பக்கம் அடகு வைத்திருந்தாலும் கூட, உங்கள் நகையை மீட்டு, பணத்தினை கழித்துக் கொண்டு மீத தொகையை உங்கள் கொடுக்கிறது.
தங்கத்தை பற்றி அரிந்து கொள்ள அதிநவீன தொழில்நுட்பம்
அது மட்டும் அல்ல, தங்கத்தின் தூய்மையினை பார்க்க அதிநவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்துகின்றது. இதன் பிறகே உங்களுக்கு சேர வேண்டிய சரியான தொகையை கொடுக்கிறது. இதற்காக ஆதார் அட்டை மற்றும் பான் எண் தேவை. ஆட்டிகா நிறுவனத்தில் இந்த செயல்பாடு 15 நிமிடங்களுக்குள் செயல்படுத்தப்படுகின்றது. ஆக வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
எந்த நிறுவனம் அருகில் உள்ளது?
எனினும் இந்த நிறுவனங்களில் ஏதாவது ஒன்று நமக்கு அருகில் கிளைகளை வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் ஆன்லைனில் விற்பனை செய்ய முடியாது. மேற்கண்ட நிறுவனங்களில் ஆட்டிகா இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதே ஆட்டிகாவுடன் ஒப்பிடும்போது டி கோல்டின் கிளைகள் குறைவு தான்.
கமிஷன் உண்டு
மேற்கண்ட இந்த நிறுவனங்கள் அன்றைய விலையினை, உங்கள் தங்கத்திற்கு கொடுக்கின்றன. எனினும் இந்த நிறுவனங்களில் 2% கமிஷன் உண்டு. அதோடு உங்களது தங்கத்தினை இவ்வாறு விற்கும் போது வரியும் செலுத்த வேண்டியிருக்கும். பெரும்பாலானவர்கள் தங்கத்தை நகைகளாக அல்லது நாணயங்களாகத்தான் வாங்குகிறார்கள். இந்த வடிவில் உள்ள தங்கத்தை விற்கும் போது அதற்கான வரிவிதிப்பு அதை நீங்கள் எவ்வளவு காலம் வைத்திருந்தீர்கள் என்பதைப் பொறுத்தது.
குறுகிய கால மூலதன வரி உண்டு
தங்கம் வாங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விற்கப்பட்டால், அது குறுகிய கால மூலதனமாக கருதப்படுகிறது. குறுகிய கால மூலதனத்தில் கிடைத்த வருமானமாக கணக்கிடப்பட்டு உங்களுக்கு பொருந்தக்கூடிய வருமான வரி அளவின் அடிப்படையில், வரி விதிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விற்கப்படும் தங்கம் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் என்ற வகையில் 20% வரி விதிக்கப்படும்.
விசாரித்து செயல்படுங்கள்
இவ்வாறு உங்கள் தங்கத்தினை நீங்கள் விற்பனை செய்யும் முன்பு, பல நிறுவனங்களுக்கும் கால் செய்து விவரங்களை கேட்டறியலாம். பொதுவாக நகைக் கடைகளில் சேதமடைந்த நகைளை விற்பனை செய்யும் போது விலை உங்களுக்கு சரியான விலை கிடைக்காது. ஆனால் இதுபோன்ற தங்கத்திற்கு என்று தனித்துவமான நிறுவனங்களில் விற்கும் போது உங்களுக்கு அதிக தொகை கிடைக்கும்.
உங்களுக்கும் திருப்தி ஏற்படும். சிலர் நகைகடைகளில் நகைகளை குறைந்த விலைக்கு விற்று விட்டு, பின்னர் வருத்தப்படுவதை விட, ஒன்றுக்கு இரு முறை பல வகையிலும் விசாரித்து, எங்கு உங்களுக்கு அதிக தொகை கிடைக்கும் என்பதனை தெரிந்து கொண்டு விற்பனை செய்யலாம்.