இந்தியாவில் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை குறைத்து, தங்கம் உற்பத்தி துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பட்சத்தில், இந்தியாவில் தங்க உற்பத்தியானது 1150% அதிகரிக்கலாம் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் தங்க உற்பத்தியில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பட்சத்தில், ஆண்டுக்கு இந்தியாவின் தங்க உற்பத்தி வெறும் 1.6 டன்னில் இருந்து, 20 டன்னாக அதிகரிக்கலாம் என WGC தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தினை மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடான இந்தியா, அதன் பயன்பாட்டில் பெரும் பகுதியினை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருகின்றது.
கடுமையான கட்டுப்பாடுகள்
தங்கத்தினை அதிகளவில் இறக்குமதி செய்வதால், இந்தியாவில் வர்த்தக பற்றாக்குறையானது பெரியளவில் அதிகரித்து வருகின்றது. இதனால் அரசு இதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மேலும் தங்கத்திற்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும் அதிகம். எனினும் இந்தியாவில் தங்கம் இறக்குமதியானது மிக அதிகம் எனலாம்.
தங்கம் இறக்குமதி
கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் கூட 430 டன் தங்கத்தினை இறக்குமதி செய்திருந்தது. இதே 2021ம் ஆண்டில் 1050 டன் தங்கத்தினை இறக்குமதி செய்தது. இதன் மதிப்பு 55.7 பில்லியன் டாலராகும். இதற்கிடையில் தான் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக தங்க நகை உற்பத்தியாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இது இறக்குமதியினை அதிகரித்தாலும், மறுபுறம் நகை ஏற்றுமதி விரிவடைய ஏதுவாக அமையும் என கூறப்படுகிறது. .
திறனை அதிகரிக்க வேண்டும்
இதற்கிடையில் தான் இந்தியாவின் சுரங்கத் திறன் அதிகரிக்க வேண்டிய அவசியத்தினை உலக கவுன்சில் கூறியுள்ளது. இது இந்தியாவில் இருக்கும் தேவைக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் உலக தங்க கவுன்சிலின், இந்தியா நடவடிக்கைகளின் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரியான சோம சுந்தரம் பிஆர் கூறியுள்ளார்.
இந்தியாவில் ரொம்ப கஷ்டம்
இந்தியாவில் சுரங்க உரிமத்தை பெறுவது என்பது நீண்ட செயல்முறையாகும். இது முதலீட்டினை தடுக்கின்றது. குறிப்பாக பல சர்வதேச நிறுவனங்களில் இருந்து வரும் முதலீடுகளையும் தவிர்க்கிறது. மேலும் பெரும்பாலான தங்க சுரங்கங்கள் சரியான சாலை வசதி இன்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ளன. இதனால் போக்குவரத்தானது மிக கடினமாக உள்ளது. இதனால் செலவினமும் அதிகம் என்று அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
வேலை வாய்ப்பும் பெருகும்
தற்போது கர்நாடாகவில் உள்ல ஹட்டி கோல்டு மைனில் 4,000-க்கும் மேற்பட்ட பணியாளார்களும், ஒப்பந்ததாரர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவின் மொத்த உற்பத்தில் பெரும் பகுதியினை கொண்டுள்ளது.
தங்கம் சுரங்கம் பொதுவாக 3000 - 4000 பேருக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும். ஆனால் இதற்காக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட வேண்டும். இதுவே தங்க உற்பத்தியினை மேம்ப்படுத்த உதவும் என்றும் சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.