சொக்க வைக்கும் சொக்க வைக்கும் தங்கம்.. என்ற காமெடி வரிக்களுக்கு ஏற்ப இன்று தங்கத்திற்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது எனலாம். ஏனெனில் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை விரும்பி அணியப்படும் ஆபரணமே தங்கம் தான்.
அதிலும் அது கொரோனா காலமாக இருந்தால் என்ன? எப்படி இருந்தால் என்ன? தங்கம், தங்கம் தான்.
இது இந்தியா மட்டும் அல்ல, உலகெங்கிலும் தங்கம் என்றாலே அது ஓரு பாதுக்கப்பான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது. என்ன இந்தியாவில் அதிகம் ஆபரண தங்கமாக விரும்புகிறார்கள் என்றால், அண்டை நாடுகளில் பேப்பர் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்கின்றனர்.
இது தான் சிறந்த முதலீடு
சர்வதேச அளவில் இன்றைய காலகட்டத்தில் சிறந்த முதலீடாக பார்க்கப்படுவது தங்கம் தான். மற்ற பாதுகப்பற்ற முதலீடுகளில் உள்ள, முதலீடுகளை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர் முதலீட்டாளார்கள். சில சர்வதேச காமெக்ஸ் சந்தைகளில் உள்ள தங்கத்திலும், சிலர் தங்கப் பத்திரங்களிலும், தங்க ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வருகின்றனர்.
இது தான் காரணம்
இது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிலவி வரும் நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலைகளாலும் தங்கம் இந்த சமயத்தில் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. அதிலும் இந்திய மக்களை பொறுத்தவரையில் காலம் காலமாக பிசிகல் தங்கம் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது.
இனியும் பாதுகாப்பானதா?
எப்படி இருப்பினும் 10 கிராம் தங்கத்தின் விலையானது 43,000 - 47,000 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வி இந்த சமயத்தில், இனியும் மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்வது அர்த்தமுள்ளதா? ஏனெனில் ஏற்கனவே இது காலாண்டர் ஆண்டில் 16% மாற்றம் கண்டுள்ளது. ஆக இப்போது இந்த விலைமதிப்பற்ற உலோகத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது தானா? என்பது தான்.
தற்போதைய விலை பற்றிய கவலை வேண்டாம்
தங்கம் வாங்குவதற்கான நியாயமான விலை தான் என்ன? இலக்கு என்ன? தற்போதைய சூழ்நிலையில் முதலீடு செய்ய சரியான வழி என்ன? நீங்கள் ஒரு பாதுகாப்பான முதலீட்டாளராக இருந்தால், நீண்டகாலத்திற்கு லாபம் சம்பாதிக்க விரும்பினால், தற்போதைய விலை, சிறிய ஏற்ற இறக்கம் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
நெருக்கடி காலத்தில் தங்கம் சிறப்பாக செயல்படும்
ஏனெனில் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி படி, பணமதிப்பிழப்பு காலத்தில் தங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும். பணவாட்டம் என்பது வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும். நுகர்வும் குறைகிறது. பொருளாதாரத்தில் நிதி அழுத்தம் இருக்கும் காலம். கடந்த 2000ம் ஆண்டின் போதும், 2008ம் ஆண்டின் உலக நெருக்கடியின் போதும், தங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டதையும் நாங்கள் கண்டோம்.
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தற்போதைய நிலைமை உலகளாவிய நிதி நெருக்கடியை விட மிகவும் இருண்டது. இதனால் பங்கு சந்தைகள் சரிவைக் கண்டன. இது கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. இது வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டது. ஆனால் அதே சமயம் இதற்கெல்லாம் எதிர்மாறாக தங்கம் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
வருடா வருடம் லாபம் கொடுக்கும் தங்கம்
இன்னும் சொல்லப்போனால், பத்திர முதலீடுகள் கூட இந்த சமயத்தில் வீழ்ச்சி கண்டன. ஆனால் தங்கம் முதலீடு அப்படி இல்லை. உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் படி, 1973 முதல் தங்கம் ஆண்டுக்கு சராசரியாக 14.10% லாபம் கொடுத்து வருகிறது. ஆனால் அதே சமயம் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 21 அன்று வாழ்நாள் உயர்வான 77 ரூபாயினை எட்டியது.
தங்கம் விலை அதிகரிக்கும்
ஆக எதிர்வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரம் மேற்கொண்டு வீழ்ச்சி காணக்கூடும். இதன் காரணமாக தங்கம் விலையானது மேலும் அதிகரிக்கக் கூடும். இது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையக்கூடும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
விலை அதிகரிக்கலாம்
தற்போதைய காலத்தில் தங்க சுரங்கங்கள் கொரோனா வைரஸ் காரணமாக தங்களது வர்த்தகத்தினை நிறுத்தி வைத்துள்ளன. இதுவும் கூட தங்கம் விலை அதிகரிக்க மேற்கொண்டு ஒரு காரணமாக அமையும். ஏனெனில் சப்ளை குறைவு, அதே நேரத்தில் தேவை அதிகரிப்பும் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் தங்கம் 25 சதவீத லாபத்தினை கொடுத்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரையில் 16 சதவீத லாபத்தினை கொடுத்துள்ளது.
பாதுகாப்பான முதலீடு தான்?
ஆக இது வரும் நாட்களில் பொருளாதாரம் மேலும் அழுத்தத்தினையே காணக்கூடும். இதனால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு சிறந்த வாய்ப்பு தான். இது ஒரு சிறந்த நேரம் தான். அதிலும் இந்திய அரசின் தங்க பத்திரம், கோல்டு இடிஎஃப் போன்றவை சிறந்த முதலீட்டு வாய்ப்புகளாக பார்க்கப்படுகின்றன.
இப்படி தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்
தங்கம் விலை அதிகரிப்பு காரணமாக, நாம் பணப்புழக்கத்திற்கான பிரச்சனையை சந்திக்க நேரிடலாம், ஆக இது சந்தையில் குறைந்த தேவைக்கு வழிவகுக்கலாம். ஆக நீங்கள் தங்க பத்திரங்களாகவே அல்லது கோல்டு இடிஎஃப்க்கள் முதலீடு செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆக தங்கம் இந்த சமயத்தில் பாதுக்காப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.