இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 65 வயதான நிலையில் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை வாரிசு கைகளுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
திருபாய் அம்பானி இறந்த உடன் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சொத்துக்களுக்காக எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும், இதேபோன்ற பிரச்சனை தனது 3 பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோருக்கு வர கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை 3 ஆகப் பிரித்து 3 பிள்ளைகளுக்கும் அளிக்கத் திட்டமிட்டு உள்ளார்.
முகேஷ் அம்பானி
65 வயதான முகேஷ் அம்பானி நிர்வாகம் செய்யும் 222 பில்லியன் டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45 வது வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் நிர்வாகப் பொறுப்பு கைமாற்றுவது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
45வது வருடாந்திர பொதுக் கூட்டம்
இன்று நடக்க உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இக்குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பைத் தனது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுப்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகாஷ் அம்பானி
ஜூன் மாதம் ரிலையன்ஸ் ஜியோ-வின் சேர்மன் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்த நிலையில், அவருடைய மூத்த பிள்ளையான ஆகாஷ் அம்பானிக்குக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் வாரிசு கைகளுக்கு ரிலையன்ஸ் மாறுவதன் முதல் படியாகப் பார்க்கப்பட்டது மட்டும் அல்லாமல் எதிர்கால வளர்ச்சி பணிகளின் ஆரம்பக் கட்டமாகப் பார்க்கப்பட்டது.
3 பிள்ளைகள்
ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகிய 3 பிள்ளைகளும் பல ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளிலும், தலைவர்களுடனும், உயர் அதிகாரிகள் உடனும் பணியாற்றிய பின்னரே முகேஷ் அம்பானி நிர்வாகத்தை வாரிசு கைகளுக்கு மாற்ற முடிவு செய்தார்.
ஈஷா அம்பானி
இதன் மூலம் இன்றைய கூட்டத்தில் ஈஷா அம்பானி-க்கு ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் சேர்மன் பதிவி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனந்த் அம்பானி
இதில் அனந்த் அம்பானி இளையவர் என்பதால் சில ஆண்டுகளுக்குப் பின்பு தான் நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது, இன்றைய 45வது வருடாந்திர கூட்டத்தில் முழுக் கவனமும் ஈஷா அம்பானியின் நிர்வாகப் பொறுப்பு கைமாறுவது தான்.