இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதுவது கட்டாயம். இதில் தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்புகளுக்கு சீட் கிடைக்கும். அண்மை காலமாகவே நீட் தேர்வினை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் நடந்தன.
நீட் தேர்வில் முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களால் மே மாதம் நடந்த தேர்வே ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஒரு முறை தேர்வு நடத்தப்பட்டது. இதனை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். மேலும் கல்வி துறை சீர்த்திருத்தங்களுக்காக நந்தன் நீலகேனி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் முக்கிய தேர்வுகளில், தற்போதைய நிலவரப்படி நீட்-யுஜி தேர்வு மட்டுமே கணினி வழி முறைக்கு மாறாமல் உள்ளது. ஜேஇஇ , யுஜிசி-நெட், கியூட் மற்றும் நிஃப்ட் போன்ற மற்ற அனைத்து முக்கிய தேர்வுகளும் ஏற்கனவே கணினி வழி தேர்வு முறைக்கு மாற்றப்பட்டுவிட்டன. இதுகுறித்து பேசிய என்டிஏ தலைவர் அபிஷேக் சிங், கணினி வழி தேர்வுதான் எதிர்காலம்; எனவே வரவிருக்கும் நாட்களில் எங்களின் அனைத்து தேர்வுகளும் கணினி வழி முறையிலேயே நடத்தப்படும் என கூறினார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, கணினி வழி நீட் தேர்வுகளை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பாதுகாப்பு தேவைகள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை ஆய்வு பணிகளில் ஈடுபட்டுளதாக கூறியுள்ளார்.
தேர்வு பாதுகாப்பை பலப்படுத்தவும், முறைகேடுகளை கண்டறியவும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் என்டிஏ தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தேர்வு தொடர்பான பதிவுகள், தரவுகள் மற்றும் விடை அளிக்கும் முறைகளை ஏஐ மூலம் பகுப்பாய்வு செய்து, ஏதேனும் மோசடிகள் அல்லது அமைப்பு ரீதியான சிக்கல்கள் உள்ளதா என்பதை முன்கூட்டியே கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்த மிகப்பெரிய மாற்றத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, நாடு முழுவதும் போதுமான தேர்வு மையங்களை உருவாக்குவதுடன், ஆன்லைன் தேர்வை தடையின்றி நடத்தும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்புகளையும் பலப்படுத்த வேண்டியது அவசியம் உள்ளது என என்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலும் தேர்வு மையங்களை அமைத்து தேர்வுகளை நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு முன்பு இந்தியாவின் உள்நாட்டு தேர்வு அமைப்புகளை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், பாதுகாப்பாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதே தற்போதைய உடனடி முன்னுரிமை என அபிஷேக் சிங் குறிப்பிட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு , ஆள்மாறாட்டம் மற்றும் பிற முறைகேடுகள் என நீட் தேர்வில் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு என்பதால் நீட் தேர்வு தொடர்பான ஒவ்வொரு மாற்றமும் ஆயிரக்கணக்கான மாணவர்களை பாதிக்கும்.


Click it and Unblock the Notifications


