ஈரான் போர் பிரச்சினை முடியாமலேயே இருக்கிறது. இதனால் இந்தியாவில் எரிபொருட்கள் நெருக்கடி உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தள்ளி போட வேண்டும் என கேட்டு கொண்டிருந்தார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, எனவே கச்சா எண்ணெய் வாங்க இந்தியா கையிருப்பில் இருக்கும் டாலர்களை அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த சூழலில் தங்கமும் அதிகமாக வாங்கினால் நம் கைவசம் இருக்கும் டாலரை அத்தியாவசியமான பெட்ரோல், டீசலுக்கு செலவிட முடியாமல் வீணாக தங்கம் வாங்குவதற்கு பயன்படுத்த நேரிடலாம். எனவே டாலர் வெளியேற்றத்தை தடுக்கவும் நாட்டின் பொருளாதார நலனை காக்கவும் திருமணங்களுக்காக தங்கம் வாங்குவதை ஒரு வருடத்திற்குத் தவிர்க்க வேண்டும் என இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்க நகை வாங்குவதைக் குறைப்பதன் மூலம் இந்தியாவின் இறக்குமதிச் செலவைக் குறைக்க முடியும் என்பது அரசின் நோக்கம். பிரதமர் மோடியின் இந்த பேச்சு பங்குச் சந்தையில் வலுவாக எதிரொலித்தது. பிரதமரின் இந்த வேண்டுகோள் நகை விற்பனையை பாதிக்கும் என முதலீட்டாளர்கள் அஞ்சியதால், இன்று பங்குச் சந்தையில் நகை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
டாடா குழுமத்துக்கு சொந்தமான டைட்டன் (Titan) நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 6% வரை சரிந்து 4,227 ரூபாய்க்கு வர்த்தகமானது. அடுத்ததாக கல்யாண் ஜூவல்லர்ஸ் (Kalyan Jewellers) நிறுவன பங்கு 8% சரிவை சந்தித்து 389 ரூபாய் என ஆனது. அதே போல சென்கோ கோல்ட் (Senco Gold) நிறுவன பங்கு மதிப்பு 10% குறைந்து 326 ரூபாய் என வர்த்தகமானது.
தங்கம் வாங்குவதை குறைக்குமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து, நகை நிறுவனங்களின் எதிர்கால லாபம் பாதிக்கும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் நகை விற்பனை நிறுவன பங்குகளை விற்பனை செய்தனர். இதுவே நகை விற்பனை நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிய காரணமாக உள்ளது.
ஒட்டு மொத்தமாகவே இந்திய சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை கண்டன. சென்செக்ஸ் 1200 புள்ளிகள் சரிவடைந்தது அதாவது கிட்டதட்ட 1 சதவீதம் வரை வீழ்ச்சியை கண்டு 76, 166 புள்ளிகள் என்ற அளவுக்கு சென்றது. அதே வேளையில் தேசிய பங்கு சந்தை குறியீடு நிஃப்டி 1 சதவீதம் சரிவடைந்து 23,845 புள்ளிகள் என வர்த்தகமானது. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் இன்று வர்த்தகத்தில் சரிவை சந்தித்தன.
பங்குச்சந்தை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடி ரூபாய் வரை இழந்தனர். ஈரா மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்க தயாராகி வருகிறது என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
அடுத்ததாக ஈரான் ,அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை நான்கு சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 105 டாலர்களாக வர்த்தகமானது. இதுவும் பங்குச்சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 94.88 ரூபாய் என வீழ்ச்சி கண்டிருப்பதும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுவதும், பங்குச்சந்தையின் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

