மும்பை: பி.எம்.சி வங்கி வழக்கில் இணைக்கப்பட்டு முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில், முறைகேடு வழக்கில் இணைக்கப்பட்ட ஹெச் டி ஐ எல் நிறுவனத்தின் சொத்துக்களை மீட்டு வைப்புத்தொகை வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அந்த பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு ,தொடர்புடைய சட்ட நடைமுறைகள் குறித்து விவாதிப்பது மற்றும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியை புனரமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர், மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே, பொருளாதார குற்றப்பிரிவு (ஈ.ஓ.டபிள்யூ) இணை ஆணையர் ராஜ்வர்தன் சின்ஹா, ஈ.ஓ.டபிள்யூ.சி.பி ஸ்ரீகாந்த் பரோப்கரி, அமலாக்க இயக்குநரகம் (இ.டி) இயக்குனர் சஞ்சய் மிஸ்ரா மற்றும் பி.எம்.சி. வங்கி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில், கலந்து கொண்டனர்.
வங்கி கணக்கு
"இந்த கூட்டம் மிக முக்கியமானது, ஏனெனில் இது வங்கியை மீட்டெடுப்பது பற்றி வழிமுறைகளை வகுக்கவும், வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளை குறைக்கவும் உதவும். பி.எம்.சி வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவி கிடைக்க உதவுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி அளித்துள்ளார், "என்றார் முன்னாள் எம்.பி. கிரித் சோமையா.
4000 கோடி சொத்து
எச்.டி.ஐ.எல் பிரமோட்டர்களான ராகேஷ் மற்றும் சாரங் வதவன் ஆகியோர்களிடம் இருந்து ரூ. 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இந்த வழக்கில் இணைத்துள்ளன. பி.எம்.சி வங்கியின் முன்னாள் சி.எம்.டி ஜாய் தாமஸுக்கு சொந்தமான ஒன்பது குடியிருப்புகள் மற்றும் புனேவில் உள்ள ஒரு கடை உட்பட சில சொத்துக்கள் தற்காலிக இணைப்பின் கீழ் உள்ளன.
காவல்துறை ரெடி
பி.எம்.சி வங்கி வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவது குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, நீதிமன்றத்தில் ஏற்கனவே, தெரிவித்துள்ளது. ஆனால், இணைக்கப்பட்ட சொத்துகளுக்கான ஏல நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து அமலாக்கத்துறை, மேலும் அதிக சட்ட ஆலோசனையைப் பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலம் நடவடிக்கை
இதுபற்றி மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், எங்களாலும், அமலாக்கத்துறையாலும், இணைந்து பறிமுதல் செய்த சில சொத்துக்களும் உள்ளன. சொத்துக்களை ஏலம் விட எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்று எங்கள் தரப்பு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தாலும், அமலாக்க அதிகாரிகள், இந்த சொத்துக்களை ஏலம் விடும் நடைமுறைகளுக்கு சம்மதிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்
அமலாக்கத்துறை சம்மதித்தால், ஏலம் நடத்த, ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டு, இதன் மூலம் கிடைக்கும் வருமானம் வங்கியை மீட்டு புனரமைக்கப் பயன்படுத்தப்படும். இது வாடிக்கையாளர் பிரச்சினைகளை தீர்க்கும். மேலும் வங்கியும் நசிவடையாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.