திரையுலக நட்சத்திரங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் வரை தான் வருமானம், அது நின்று விட்டால் வருமானமும் அப்படியே நின்றுவிடும். இதனால் தான் பல நடிகர் , நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே பல்வேறு தொழில்களில் பணத்தை முதலீடு செய்து எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்து கொள்வார்கள்.
குறிப்பாக பாலிவுட் சினிமா பிரபலங்கள் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு என சொந்தமாக ஃபேஷன் பிராண்டுகள் தொடங்கி வைத்துள்ளனர். சிலர் தேடி தேடி புது புது ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இவர்களில் இருந்து வேறுபட்டவராக இருக்கிறார் நடிகர் மாதவன். தன்னுடைய திறமையான நடிப்புக்கும் அழகிய புன்னகைக்கும் பெயர் போன மாதவன் தான் எப்படி நிதி மேலாண்மை செய்கிறேன் என்பதை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

பாட்காஸ்ட் ஒன்றில் பங்கேற்று பேசிய மாதவன் நிதி சார்ந்த பல தகவல்களை பேசியுள்ளார். தோராயமாக 115 கோடி ரூபாய் சொத்து மதிப்புடையவராகவும், திரையுலகில் மிக வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராகவும் இருந்தாலும், மாதவன் தனது பணத்தை மிகவும் கவனமாக கையாள்வதாக கூறுகிறார். என்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே எனக்கு பிடித்த விலையுயர்ந்த பொருட்களை நான் உடனே வாங்குவதில்லை. எனக்கு ஒரு பெரிய கார் வாங்க வேண்டும் என ஆசை இருந்தாலும், எனது பட்ஜெட்டுக்குள் வரவில்லை என்றால், நான் வாங்க மாட்டேன் என கூறியுள்ளார்.
குறிப்பிட்ட வரம்புக்குள் வாழ்வதையே விரும்புவதாக கூறியுள்ள மாதவன், எப்போதுமே எதற்கு எவ்வளவு பணம் செலவிட வேண்டும் என்பதில் தான் தெளிவாக இருப்பேன் என கூறுகிறார். முதலீடுகளை பொறுத்தவரை தனது தாத்தாவின் அறிவுரையின்படி, ஆரம்பத்திலிருந்தே நிலம் மற்றும் சொத்துகளில் தான் அதிகம் முதலீடு செய்வேன் என்கிறார். இதனால் தான் மும்பை , சென்னை மற்றும் துபாய் போன்ற முக்கிய பகுதிகளில் அவர் சொத்து வாங்கி வைத்துள்ளார்.
முதலீடு என வரும் போது மிடில் கிளாஸ் மைண்ட் செட் தான் வேலை செய்கிறது இதனால் தான் நான் ரியல் எஸ்டேட் முதலீடுகளை நம்புகிறேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். கையில் பணம் இருக்கிறது என்பதற்காக ஆடம்பரமான பொருட்களை வாங்குவதில் விருப்பமில்லை என கூறும் மாதவன், என் கையில் பணம் இருந்தால் நான் ரியல் எஸ்டேட்டில் தான் முதலீடு செய்வேன் ஏனெனில் நான் மிடில் கிளாஸில் இருந்து வந்தவன், இது மாறாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மாதவன் சிறந்த கதைகளையும் கதாபாத்திரங்களையும், தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். அண்மையில் கூட ஜிடி நாயுடு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மும்பை, சென்னை, துபாயில் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்துள்ளார். தனது மகனின் நீச்சல் பயிற்சிக்காக குடும்பமாக துபாயில் தங்கியுள்ளார். சொந்தமாக ஒரு சொகுசு கப்பல் கூட வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications


