இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் எப்போதும் இருக்கக் காரணம் என்ன தெரியுமா? வங்கிகளில் கடன் பெற்றால் கூட அவ்வளவு சீக்கிரம் கடன் கிடைக்காது. அதுவே தங்கம் வைத்திருந்தால் அருகில் உள்ள கடைக்கு சென்று எளிதில் அடமானம் வைத்து பணம் பெறலாம். பிற முதலீடுகளைக் காட்டிலும் தங்கத்தின் லிக்குவிடிட்டி இன்னும் அதை தனிச்சிறப்பாக வைத்திருக்கிறது.
நம்மில் பலர் நகையை அடமானம் வைத்து பணம் பெற்றிருப்போம். இப்படி வாங்கப்படும் கடனின் காலம் முடிந்து விட்டால் மீண்டும் அதை ரினிவல் செய்து கொள்ளலாம். இதற்கு கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் தங்கத்தின் மதிப்போடு கூடுதலாக ரினிவல் செய்யவும் வங்கிகள் அனுமதிக்கின்றன.

உதாரணமாக ஒருவர் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்கத்தை அடகு வைக்கிறார் என்றால். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அதற்கு வட்டி செலுத்த வேண்டும் இல்லையென்றன்றால் மீட்க வேண்டும். அப்படி செலுத்த முடியாவிட்டால் ரினிவல் செய்து கொள்ளலாம். இந்த வழி எளிய வழியாக தோன்றலாம். ஆனால் இதில் சில ஆபத்தும் இருக்கிறது.
தங்கம் விலை குறைந்தால் என்ன நடக்கும்?: பொதுவாக தங்கத்தின் மதிப்பு என்பது புவிசார் அரசியல் பதற்றங்கள், டாலரின் மதிப்பு, பணவீக்கம் போன்ற பல்வேறு காரணியை பொறுத்து மாறுபடுகிறது. இதனால் தங்கத்தின் விலை எப்போது குறையும்? எப்போது ஏறும்? என்பதை யாராலும் கணிக்க முடியாது. நீங்கள் நகையை அடகு வைக்கும் போது தங்கத்தின் மதிப்பு அதிகமாக கூட இருக்கலாம். ஆனால் அதன் பிறகு தங்கம் விலை குறைந்தால் அங்கு தான் பிரச்சினை தொடங்கும்.
நீங்கள் கொடுக்கும் தங்கத்தின் சந்தை மதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் தான் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் உங்களுக்கு கடனாக கொடுக்கும். இதைத்தான் லோன் டூ வேல்யூ ரேஷியோ என்று கூறுவார்கள். அதாவது உங்களிடம் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் நீங்கள் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்.
அதேபோல திடீரென தங்கத்தின் விலை குறைந்து உங்களுடைய தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.6.5 லட்சம் குறைகிறது என்றால்.. நீங்கள் வாங்கிய ரூ.5 லட்சம் கடன் அப்படியே இருக்கும். ஆனால் நகையின் மதிப்பு குறைந்திருக்கும். இதுபோன்ற சூழலில் வங்கிகள் உங்களிடம் கூடுதல் நகையைக் கேட்க வாய்ப்புள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி ஒவ்வொரு வங்கியும் இந்த லோன் டு ரேஷியோ வேல்யூ அடிப்படையில் தான் லோன் வழங்க வேண்டும். ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 85 சதவீதமும், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 80 சதவீதமும் லோனாகக் கிடைக்கும்.
பெரும்பாலான வங்கிகள் ஒரு வருடம் வரை நீங்கள் அடமானம் வைத்த தங்கத்தை மீட்க அவகாசம் கொடுக்கின்றன. அதன் பிறகு மீட்க முடியவில்லை என்றால் வட்டியைக் கட்டலாம். தங்கத்தின் மதிப்போடு குறைவாகவே பணம் கிடைப்பதால் சில நேரங்களில் உங்கள் கையில் பணம் இல்லை என்றாலும் ரெனிவல் செய்யும் ஆப்ஷனை வங்கிகள் வழங்குகின்றன.
பணம் இல்லாமல் கடனை ரினிவல் செய்யும் போது புதிய வட்டி விகிதங்கள், அபராதம் மற்றும் பிற பிராசசிங் கட்டணங்கள் அனைத்தையும் தங்கத்தின் மதிப்போடு வங்கி ஈடு செய்யும். இதனால் தான் தங்கத்தின் விலை திடீரென குறையும்போது உங்களிடமிருந்து கடன் தொகையை திருப்பி செலுத்த சொல்லி நோட்டீஸ் வரலாம் அல்லது கூடுதலாக வேறு நகையைக் கேட்கவும் வாய்ப்புள்ளது.
ஒருவேளை இதற்கும் வாடிக்கையாளர் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்றால் நகையை ஏலம் விட்டு வங்கிகள் பணத்தை பறிமுதல் செய்யும்.
வங்கிகளே உங்களை ரினிவல் செய்ய சொன்னாலும் தற்போதைய தங்கத்தின் மதிப்பு என்ன? எவ்வளவு வட்டி வந்திருக்கிறது? என்பதை எல்லாம் பார்த்துவிட்டு கையில் பணம் இருந்தால் குறிப்பிட்ட தொகையை வரவு வைக்க முயற்சி செய்யுங்கள்.
சில வங்கிகள் புல்லட் பேமெண்ட் வசதியை வழங்குகின்றன. பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் ஆப்களில் இந்த வசதி இருக்கும். அதாவது நீங்கள் நினைக்கும் நேரங்களில் குறிப்பிட்ட தொகையை அடமானம் பெற்ற தங்க கடனில் வரவு வைக்கலாம். தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் ஏறலாம்.. இறங்கலாம். எனவே அவசரத்திற்கு நகையை அடமானம் வைத்தவர்கள் கையில் சேமிப்பு வைத்திருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications

