வியாழக்கிழமை உடன் பியூச்சர் சந்தைகளின் ஆர்டர்கள் முடிந்த காரணத்தால், முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகளுக்கு அதிகமான சரிவைப் பதிவு செய்து அதிர்ச்சி அளித்துள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 40 நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியும் மக்களுக்குப் போதுமான சிகிச்சை அளிக்க வசதி வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளது.
கோவிட் வேக்சின்
இது மட்டும் அல்லாமல் மே 1ஆம் தேதி 18 வயதிற்கும் அதிகமானோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், பல மாநிலங்களில் இன்னும் கோவிட் வேக்சின் போதுமான அளவிற்கு வந்து சேராத நிலை உள்ளது.
ஆசிய சந்தைகள்
இந்தச் சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் அனைத்தும் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட காரணத்தாலும் மும்பை பங்குச்சந்தை பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 983.58 புள்ளிகள் சரிந்து, 48,782.36 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 263.80 புள்ளிகள் சரிந்து 14,631.10 புள்ளிகள் எட்டி இந்த வார வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
பார்மா மட்டும் தப்பித்தது
மேலும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் வங்கிகள், நிதியியல் நிறுவனங்கள், எப்எம்ஜிசி ஆகிய துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் பெரும் சரிவு சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பார்மா துறை பங்குகள் மட்டுமே லாபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2 சதவீத சரிவு
இந்த வாரம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டு உள்ள நிலையிலும் முதல் 4 நாட்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்தது, ஆனால் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2 சதவீதம் சரிவை அடைந்தது உள்ளது.