பெங்களூர்: உணவு சப்ளை நிறுவனமான, ஸ்விக்கி, 1,000 க்கும் மேற்பட்ட கிளவுட் சமையலறைகளை அமைத்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 12 புதிய நகரங்களில் இதுபோன்ற கூடுதல் வசதிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதுபற்றி ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில். "கிளவுட் கிச்சன்களே உணவு விநியோகத்தின் எதிர்காலமாக இருக்கும் என்று ஸ்விக்கி எப்போதும் நம்புகிறது. அதிக எண்ணிக்கையிலான கிளவுட் சமையலறைகள் சீனாவில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தை இன்னும் சில வருடங்களில் பிடித்துவிடும்" என்று ஸ்விக்கி புதிய விநியோக தலைமை நிர்வாக அதிகாரி விஷால் பாட்டியா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
1,000 க்கும் மேற்பட்ட கிச்சன்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதன் மூலம் ஸ்விக்கியின் மீதான உணவக பங்காளிகளின் நம்பிக்கையை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் உணவகச் சூழல் அமைப்பில் அதிக வெற்றிகளை பெறுவதில், ஸ்விக்கி நிறுவனத்தின் முன்னோடி முயற்சிகளை இது மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
கிளவுட் கிச்சன் என்பது, இறுதி நுகர்வோருக்கு எந்த உணவருந்தும் வசதியையும் வழங்காமல் உணவைத் தயாரித்து, வழங்குவதை குறிக்கிறது.
அதாவது உட்கார்ந்து சாப்பிடும் ஹோட்டல் வசதி இந்த கிச்சன்களில் இருக்காது.
"கடந்த இரண்டு ஆண்டுகளில், ஸ்விக்கி இந்த சமையலறைகளை அமைப்பதற்கும் நடத்துவதற்கும் ரூ .517 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இதில் கிடைத்த வெற்றி, 2020, மார்ச்க்குள் 12 புதிய நகரங்களில் அதிக கிளவுட் சமையலறைகளை கொண்டுவருவதற்கு கூடுதலாக ரூ .75 கோடியை முதலீடு செய்ய ஊக்குவித்திருக்கிறது, " என்கிறார் பாட்டியா.
சிறு நகரங்கள்
டயர்- II மற்றும் -III நகரங்களிலும், உணவு சப்ளையை துவங்கியதால், அங்கு உணவகத் தொழிலில் 8,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை ஸ்விக்கி உருவாக்கியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் உணவகத் துறையில் மேலும் 7,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளோம் என்று ஸ்விக்கி கூறுகிறது.
தரமான உணவு
2017 ஆம் ஆண்டில் ஸ்விக்கி அக்சஸ் தொடங்கப்பட்டது, அதன் உணவக பார்ட்னர்களுக்கு வணிக விரிவாக்கத்தை செயல்படுத்தும் போது தரமான உணவை நுகர்வோருக்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு
முன்னதாக, ஸ்விக்கி மற்றும் ஜோமாட்டோ நிறுவனங்கள், உணவு வினியோக நெட்வொர்க், போட்டியை சமாளிக்க இணைய திட்டமிட்டுள்ளன என செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான, பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு, டிஸ்கவுண்ட்டுகள் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.
போட்டி அதிகம்
நாட்டின் மிகப் பெரிய இரு பெரிய உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கியும், ஜோமோட்டோவும் இப்போது பல போட்டிகளை சந்திக்க தொடங்கியுள்ளன. எனவேதான், இரு தரப்பும், தங்களுக்குள் இணைவது பற்றி சிந்திக்கின்றன. ஸ்விக்கி பெங்களூரை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாகும். ஜோமோட்டோ குருக்கிராமை சேர்ந்த நிறுவனம்.